Tuesday, April 26, 2011

அத்தகிரியும் அருளாளனும்-6

அத்தகிரியும் அருளாளனும்-6

1. ஊனில் வாழ் உயிரே, நல்லைபோ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான், மதுசூதனன், என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னன்லும் அமுதும் ஒத்தே //

ஊன் என் உடமிபில் வாழ்கின்ற என் உள்ளமே-நீ நல்லவன்-உன்னால் நான் மிக்க நன்மையை பெற்றேன்- நானும் எம்பெருமானும் என் உள்ளத்தே ஒன்றாக கலந்துவிட்டோம். அந்த கலவையால் எல்லா விதமான சுவையும் உண்டாகிவிட்டது. தேனும், பாலும், நய்யும், கருப்பஞ்சாரும் அமுதும் கலந்தாற்ப்போல
திருவாய்மொழி

1. எத்திசை நிலனுமெய்தி அருந்தவம் செய்த வந்நாள்
சத்தியவிரதம் செல்வாய் என்றதோர் உரையின் சார்வால்
அத்திசை சென்றழைத்து அங்கமலரில் எடுப்பான் தன்னை
உத்தரவேதி செய்யென்று உரையணங்கு இறை உரைத்தான் //

வாக்கின் தேவதையான ப்ரஹ்மா எல்லா திசைகளிலுமுள்ள ஸ்தானங்ககளுக்கும் சென்று ஒருவராலும் செய்யமுடியாத தவத்தை செய்த காலத்தில் ஸத்யவ்ரத க்ஷேத்திரத்திற்கு போ என்று அசரீரி சொல்ல, ப்ரஹ்மா விச்வகர்மாவை அழைத்து யாகம் செய்வதற்கு உத்திர வேதியை அத்தகிரியில் அமைப்பாயாக என்று உரைத்தான்.
ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. எம்மாவீட்டுத் திறமும் செப்பம்; நின்
செம்மா பாத-பற்புத் தலைசேர்த்து; ஒல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே//
கஜேந்திரனின் துன்பத்ததை நீக்கிய பிரானே! நான் விரும்புவது எல்லாம் அகவாய் சிவந்து, புறவாய் கறுத்து, பெரிதாய் மணத்து மலர்ந்த நின் திருவடித்தாமரைகளை என் தலையின் மீது விரைவிலே சேர்க்கவேண்டும் என்பதே!. எப்படி கொக்கு வாயும், படுகண்ணியும் போல உன் திருவடிகளும் என் ர்தலையும் சேரவேண்டும் என்பதே அம்மா அடியேன் விரும்புவது.

திருவாய்மொழி
2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும்
வானவர்க்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடைய வாசியொளி ஓசையாலும்
ஒருகாலும் அழியாத அழகினாலும்
மண்மகளார்க்கு அலங்காரம் என்ன மன்னும்
மதிட் கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

ரத்தினத்தோடு தங்கத்தை சேர்ந்து இழைக்கப்பெற்ற , அழியாத சிற்ப சாஸ்திரப்படி வடிக்கப்பெற்ற , கொடை நிறைந்த , நான்கு ஜாதியனரும் நிறந்த தேவர்களுக்கு வியப்பையூட்டும் இயற்கை அழகு அமைந்த, குதிரைகள் கனைக்கும் ஓசையாலும், ஒருபோதும் அழியாத அழகு பெற்ற -பூமிக்கு ஆபரணம் போல மதிள்கள் உடைய கச்சியை கண்டு பிரஹ்மா மிகவும் மகிழ்ந்தார்.
ஹஸ்தகிரி மஹாத்மியம்

3. கரிய மேனிமிசை வெளியநீறு சிறிதே இடும்
பெரியகோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரியசொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அறியது உண்டோ- எனக்கு ஒன்று தொட்டும் இனி என்றுமே ?

எம்பெருமானுக்கு அழகோ அவன் கறுத்த திருமேனி. அந்த மேனியில் அழ்கு செய்வது விழிகளில் தீட்டப்பெற்ற அஞ்சனம். அந்த அழகனே நம் நாயகன்.அவனுக்கு நாம் சாத்தும் மாலையோ இசை மாலை. அந்த இசைமாலையில் அவன் நாம கீர்த்தனைகள் தேனினும் இனிது. இப்படி ஏந்தி அனுபவித்த நான் இனி இதைவிட சிறப்பானது ஒன்றையும் தேடி அலையமாட்டேன். கிடைப்பதற்கு அரிதான பொருள் கிடைத்தது- இனி என் காலமெல்லாம் அரிய்ழது ஒன்றும் இல்லை.
திருவாய்மொழி.

3. அன்று நயந்த அயமேத மாவேள்வி
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய் கன்றிவர
ஆதி அயனுக்கருள் செய்தணையானான்
தாதை அரவணையான் //

ப்ரஹ்மாவால் விரும்பி மேற்கொண்ட அசுவமேத யாகத்தை தடுக்க வாக் தேவதை சரஸ்வதி கோபத்தால் நதியாகி பெறுகிவர எம்பெருமான் அதை காத்து பிரம்மனுக்கு அருள்பாலிக்க வேகவதியாக-அணையாக பள்ளி கொண்டானே! என்னே அவன் கருணை.

ஹஸ்தகிரி மகாத்மியம்.

R.Jagannathan.

ஹஸ்தகிரியும், அருளாளனும்-5

ஹஸ்தகிரியும், அருளாளனும்-5

1. கனையார் கடலும் கருவினையும் காயாவும்
அனையானை- அன்பினால் ஆர்வத்தால் என்னும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய்நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல; கண்டாமே //

பெரிய திருமொழி

ஒலிமிக்க கடலும், கருவினைப் பூவும் காயாம்பூவும் போல் நிறமுள்ளவன் எம்பெருமான். அவனிடத்தே அன்பும் ஆற்றாமையும் மிகுந்து, தடாகத்தில் பூத்த மலர்களை பறித்து அவன் பாதங்களில் சம்ர்ப்பிவித்து அவனுக்கு அடியார்களாகாவிட்டால் நாம் எடுத்த பிறவி வீணே. வாழ்த்தவாயும், நினைக்க மட நெஞ்சம், தாழ்த்த சென்னியும் தந்தவன் இறைவன், இவையெல்லாம் அவனை அநுபவிக்கவே வாய்த்தவை.

1. தரணியில் மன்னி அயனார் தனித்தவம் காத்தபிரான்
கருணையெனும் கடலாடித் திருவணையைக் கண்டதற்பின்
திரணர கெண்ணிய சித்ரகுபதன் தெரிந்துவைத்த
சுருணையிலேறிய சூழ்வினைமுற்றும் துறந்தனமே //

பூமியில் ஸ்திரமாயிருந்து ப்ரஹ்மாவினுடைய அஸ்வமேத யாகத்தை காப்பாற்றி பேருபகாரம் செய்த எம்பெருமானின் க்ருபை என்னும் கடலில் நீராடி, அணையை சேவித்தபிறகு சித்ரகுப்தனால் எழுதிவைக்கப்பெற்ற கணக்கில் வந்த பாபங்கள் எல்லாம் நீங்கப்பெற்றோம்.

ஹஸ்தகிரி மகாத்மியம்.


2.ஊனில் வாழ் உயிரே, நல்லைபோ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான், மதுசூதனன், என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே //

என் உடமிபில் வாழ்கின்ற என் உள்ளமே- நீ நல்லவன் தான். உன் துணை கொண்டு நான் மிக பெரிய நன்மை அடைந்தேன். எப்பெருமான் மதுசூதனனும் நானும் என் நெஞ்சிலே ஒன்றாக கலந்துவிட்டோம். இந்த கலவையால் எல்லா சுவைகளும்- தேனும் பாலும், கருப்பஞ்சாரும் அமுதும் ஒன்றாக சேர்ந்தாற்ப்போல்.
திருவாய்மொழி

2. வாழி அருளாளர் வாழி அணி அத்தகிரி
வாழி எதிராஜன் வாசகத்தோர் வாழி
சரணாகதியென்னும் சார்வுடன் மற்றொன்றை
அரணாக கொள்ளாதாரன்பு //

பேரளுளார வாழ்க, பூமிக்கு அலங்காரமான ஹஸ்தகிரி வாழ்க, பாஷ்யகாரர் ஸ்ரீசூக்திகளில் ஈடுபட்டவர் வாழ்க, ப்ரப்த்தி என்னும் உபாயத்துடன் வேறு ஒன்றையும் உபாயமாக கொள்ளாதவர்களுடைய அன்பும் வாழ்க.
ஹஸ்தகிரி மஹாத்மியம்.

3. ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாய், தந்தையாய், அறியாதன அறிவித்த
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே

பகவானே உனக்கு இணையானவர் யாரும் இல்லை, உன்னைவிட உயர்ந்தவரும் யாரும் இல்லை. இப்படி ஆச்சர்யமான குணங்களையுடையவனே!- அந்த அந்த பொருட்களோடு ஒதத நிலைகளையுடையவனே, என்னுடைய உயிராகி, என்னைப்பெர்ற தாய் தந்தையுமாகி நான் அறியாதவையெல்லாம் அறிய செய்தாய். நீ தாயாய், தந்தையாய், ஆச்சார்யனாய் செய்த நன்மைகளை அடியேன் அறியேனே
திருவாய்மொழி

3. வம்மின் புலவீர் அருளாள பெருமான் என்றும்
அருளாழி அம்மான் என்றும்
திருமாமகளை பெற்றும் என் நெஞ்சம் கோயில்
கொண்ட பேரருளாளர் என்றும்
வியப்பா விருதூதும்படி கரைபுரண்ட கருணை கடலே
எவ்வண்ணம் பேசுவீர் ஈதென்ன பாங்கே//

புலவர்களை வாருங்கள், அருளாள பெருமான் என்றும், அருளாழி அம்மான் என்றும், பிராட்டியை தேவியாக கொண்டது மன்றி, என் மனதில் வசிக்கும் பேரளாளன் என்று ஆச்சர்யமாக பெருகும் கருணைக்கடலாக எம்பெருமானை எவ்வாறு நீங்கள் பேசவல்லீர்-இவ்வாறு செய்வது என்ன நேர்மை?

ஹஸ்தகிரி மஹாத்மியம்

R.Jagannathan.

அத்தகிரியும் அருளாளனும்-4

அத்தகிரியும் அருளாளனும்-4

1. அறிவென்னும் தாள்கொளுவி, ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண்கதவம் செம்மி- மறை என்னும்
நங்கோதி, நங்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் அடி //

வேதங்களை இடைவிடாது ஓதி அவற்றின் பொருள்களையும் நங்குணர்ந்து, ஐம்புலங்களையும் தம்வழியே செல்லவிடாதபடி திண்ணிய கடவையடைத்து, ஞானமென்னும் தாழ்பாளையிட்டு, நன்றாக த்யானம் செய்பவர்களே- பச்சை நிறத்தையுடைய கடல்வண்ணனான எம்பெருமானை நாள்தோறும் கண்டு அநுபவிக்க பெறுவார்கள்

மூன்றாம் திருவந்தாதி.

1. உத்தம வமர்த்தலம் அமைத்ததோர்
எழில் தனுவுயர்த்த கணையால்
அத்திவரக்கன் - முடிபத்தும் ஒரு
கொத்தென உதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்தவெணெய்
வைத்ததுணும் அத்தனிடமாம்
அறுக்கும் அணி அத்தஸ்கிரியே //

உயர்ந்த போர்களத்தில் அமைக்கப்பெற்ற அழகிய வில்லினின்று விடப்பெற்ற அம்பினால் அஸ்த்ர பலமுள்ள ராவணனின் தலைகள் பத்தையும் ஒரு குலையாக அறுத்த ராமனும்; மத்தினால் கடையப்பட்ட தயிரையும், வெண்ணையையும் உண்ட கண்ணன்-ஆகிய இருவருமான என் ஸ்வாமி ஹஸ்தகிரி எனும் காஞ்சியில் பக்தர்களுடைய பாபங்களை அறவே ஒழித்து நமக்காக அருள் பாலிக்க குடிகொண்டிருக்கும் க்ஷேத்திரமே அத்தகிரி.

ஸ்வாமி தேசிகன்- ஹஸ்தகிரி மஹாத்மியம்.

2. பொங்கு புணரிக் கடல்சூழ் ஆடை
நிலமாமகள், மலர்மா
மங்கை, பிரமன், சிவன் இந் திரன்வா
நவர்நா யகர் ஆய
எங்கள் அடிகள், இமையோர் தலைவ
ருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர உரைமின்
நமோ நா ராயணமே //

அலைகடலை ஆடையாகவுடைய பூமி பிராட்டிக்கும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பெரிய பிராட்டிக்கும், பிரமன், சிவன், இந்திரன் மற்றும் உள்ள தேவர்களுக்கும் தலைவன் எங்கள் நாயகன், நித்ய சூரிகளுக்கு அதிபதி. குறைவற்றவர்களுக்கும், குறைவுடையவர்கள் எல்லோருக்கும் வேற்றுமை இன்றி தலைவனாக இருப்பவன்- நாராயணன்.
அவன் நாமத்தை இருதரம் சொன்னாலே போதும்-நம் பாபங்கள் அனைத்தும் தொலைந்து போகும்-வாருங்கள் அவன் நாமத்தை-நமோ நாராயணா என்ற நாமத்தை சொல்லுவோம்.

பெரிய திருமொழி
2. திண்மணிகள் பொன்னுடனே சேர்தலாலும்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தியாலும்
வண்மை எழும் ஈரிரண்டு வண்ணத்தாலும்
வானவருக்கும் வியப்பான வகுப்பினாலும்
உண்மையுடை வாசியொளி ஓசையாலும்
ஒரு காலும் அழியாத அழகினாலும்
மண்மகளாற்கு அலங்காரம் என்ன மன்னும்
மதிட்கச்சி நகர் கண்டு மகிழ்ந்திட்டானே //

தங்கத்தில் இரத்தினத்தை இழைத்து, அழியாத சிற்ப சாஸ்திரத்தின் முறையில் அமைக்கப்பெற்ற-நான்கு ஜாதியினரும் நிறைந்த, தேவர்களும் வியங்கும் அமைப்பயுடைய, இயற்கை அழகோடு கூடிய-ஒருபோதும் அழியாமல் நிலைபெற்ற அழகினால், பூமிக்கு ஆபரணம் என்னும்படி-மதிள்கள் சூழ்ந்த காஞ்சீபுரத்தை கண்டு பிரம்மனே மகிழ்ச்சி அடைந்தான்
ஸ்ரீ ஹஸ்தகிரி மஹாத்ம்யம்-பிரம்ம புராணம்

3. உய்த்துணர்வு என்னும் ஒளிகொள் விளக்கேற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன்-மெத்தனவே
நின்றான், இருந்தான், கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து //

மூன்றாம் திருவந்தாதி
அவனே எனக்கு கதி என்று ஒளிமயமான விளக்கை ஏற்றிவைத்து அவனை தேடிப்பிடித்து என் வசமாக்கி கொண்டேன். எளியவருக்கும் எளியனான எம்பெருமான் என் நெஞ்சிலே வந்து நின்று கொண்டான். சற்று நேரம் கழித்து மெதுவாக அமர்ந்து கொண்டான். வேறு வழி இல்லை என்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொண்டு விட்டான். என்ன சுகம் எனக்கு-இது தெரியாமல் நான் இவனை நேற்றுவரை தடுத்து நிறுத்தியிருந்தேனே! என்று வருந்துகிறார் ஆழ்வார்-அவனுக்கே என்னிடம் எவ்வளவு கருணை என்று வியக்கிறார்.

3. அன்று நயந்த அயமேத மாவேள்வி
பொன்ற வுரையணங்கு பூம்புனலாய் கன்றிவர
ஆதி அயனுக்கருள் செய்தணையானான்
தாதை அரவணையான் தான் //

ப்ரம்மாவினால் விரும்பி சேய்யப்பட்ட அசுவமேதமென்னும் பெரிய யாகம் அழிந்துபோகும்படி வாக்கின் தேவதையான சரஸ்வதி அழகிய நதியாகி கோபித்துக்கொண்டு பெருகிவர உலகுக்கே தந்தையான-பாம்பணையில் பள்ளிகொண்ட எம்பெருமான் ப்ரஹ்மாவுக்கு அருள் செய்து தானை ஆற்றின் குறுக்கே அணையாகி ஸரஸ்வதியின் சீற்றத்தை தடுத்து யாகத்தை காப்பாற்றினான்-என்னே வரதனின் கருணை.
ஹஸ்தகிரி மகாத்மியம்


R.Jagannathan.