Sunday, October 31, 2010

அரங்கமும், அரங்கனும்-9

அரங்கமும், அரங்கனும்-9

பரியனாகிவந்த அவணனுடல் கீண்ட* அமரரர்க்கு
அரிய ஆதிபிரான்-அரங்கத்தமலன்முகத்து
கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்துசெவ்வரியோடி* நீண்ட அப்
பெரியவாயகண்கள் என்னைப்பேதமைசெய்தனவே
.



மிகப்பெரிய சரீரத்துடன் வந்த இரணியாஸுரனின் சரீரத்தை பிளந்தவனாய்; பிரமன் முதலிய தேவர்களுக்கு அணுகவும், அநுபவிக்கவும் அரியனாய்; எல்லாவற்றிர்க்கும் காரணா காரியமாய் உபகாரனாய்; திருவரங்கத்தில் பள்ளிகொண்டு சகல கஷ்டங்களையும் போக்குபவனாய்; அப்பேற்ப்பட்ட பெரிய பெருமாள் திருமுகத்தில் கருநிறமுடையவாய்; விசாலமாய் மலர்ந்தனவாய்; சிவந்தவரிகளை உடையனவனாய், நீண்டனவாய், அகன்றனவாய் உள்ள திருகண்கள் அவரை விட்டு வேறு எதிலும் நாடாது ஆகர்ஷிக்கின்றன.

                                                                                திருப்பாணாழ்வார்-அமலநாதிபிரான்

8. ஸாபிப்ராய ஸ்மித விகஸிதம் சாரு பிம்பாதரோஷ்டம்
துர்க்காபாய ப்ரணயிதி ஜநே தூர தத்தாபிமுக்யம்
காந்தம் வக்த்ரம் கநக திலகாலங்க்ருதம் ரங்கபர்த்து:
ஸ்வாந்தே காடம் மம விலகதி ஸ்வாகதோதார நேத்ரம் //

கருத்து அடங்கிய புன்சிரிப்பால் மலர்ந்ததாய், அழகிய கோவைகனிபோன்ற கீழ்மேல் உதடுகளையுடையதாய், துன்பம் நீங்குவதை விரும்புகின்ற மக்களிடத்தில் தூரத்திலிருந்தே அவர்களை கடாக்ஷிப்பதாய், அழகிழ பொன்னால் ஆன திலகர்த்தால் அழகு செய்யப்பெற்றதாய்-எப்போதும் நல்வரவே கூறும் திருக்கண்களுடைய திருவரங்கனது திருமுகம் என் உள்ளத்தில் ஆழமாக, உறுதியாக பதிந்துவிட்டது.

                                                            ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்.

சேதனன்:

கருவரையில் பெருமாளை சேவித்துவிட்டு திருமாமணி மண்டபத்து வாசலுக்கு வந்து- மறுபடியும் கருவரையை நோக்கினால் பெரிய பெருமாளின் திருமுகமும் அவன் நீண்ட அகல கண்கள் மட்டும் காட்சி தரும். அந்த கண்கள் என்ன சொல்கின்றன? பக்தா நீ உள்ளே வரும்போது உன் கண்களை பார்த்தேன்-அவை கலங்கி இருந்தன. நீ ஏதோ சொல்ல விரும்பினாய்-ஆனால் என்னை பார்த்ததும் ஒன்றும் சொல்லவில்லையே! கவலைபடாமல் போ! எல்லாம் நன்மையாகவே முடியும் என்று ஆறுதல் சொல்கின்றன அந்த பெரியவாய் கண்கள்.

9. ஆலமாமரத்தினிலைமேல் ஒருபாலகனாய்*
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவினணையான்*
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்
நீலமேனி ஐயோ! நிறைகொண்டது என்நெஞ்சினையே //

ஒரு பெரிய ஆலமரத்தின் இலையில் ஒரு குழந்தையாக; உலகம் ஏழும் வயிற்றில் வைத்ததாய், திருவரங்கத்தில் ஆதிசேஷனின் மேல் பல்ளிகொண்டிருக்கும் பெரிய பெருமாளுடைய அழகியதாய் பெரிய ரதனமாலையும், அளவற்ற, ஒப்பற்ற அழகையுடைய நீல திருமேனி என் உள்ளத்தின் அடக்கத்தைக் கொள்ளை கொண்டது ஐயோ! என் செய்கேன்.

                                                                               திருப்பாணாழ்வார்- அமலநாதிபிரான்

9. மால்யை ரத்ந: ஸ்த்திர: பரிமளைர்வல்லபா ஸ்பர்சமாந்யை:
குப்யச் சோளி வசந குடிலை: குந்தளை: ச்லிஷ்டமூலே:
ரத்நாபீட த்யுதி சபளிதே ரங்கபர்த்து: கிரீடே
ராஜந்வத்ய: ஸ்த்திதி மதிகதா வ்ருத்தயச் சேதஸோ மே //

உள்ளே மலர்மாலைகளால் நிலைபெற்ற மணமுடையதாய், பிராட்டிமார்கள் கை பட்டதனால், மதிப்புக்குரியனவாய் கோபங்கொண்ட சோழ நாட்டு பெண்களின் பேச்சுக்கள் போல், வக்கிரமானவையாய் உள்ள திருக்குழல்களோடு அடிப்பகுதியின் சம்பந்தம் பெற்றதாய், இரத்தினங்களாலான முடிமாலைகளின் ஒளியால் பலம் நிறம் பெற்றதான திருவரங்க நகரப்பனது கிறிடத்தில் என் உள்ளத்தின் போக்குகள் நல்ல அரசனை பெற்றதாக நிலையான இருப்பை பெற்றுள்ளன.

                                                              ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்

சேதனர்கள்:

நான் ஸ்ரீரங்கம் ஸ்டேட் பாங்கிற்கு போனேன். அங்கே அழகாக பெரிய பெருமாளை பார்த்தேன். முற்றிலும் பேப்பர் மெஷ்ஷினால் செய்யப்பட்டது. முழுவதும் கருமை நிறம். யார் செய்தார்கள் என்று விசாரித்து அவரிடம் 6-பெருமாளை வாங்கிகொண்டேன்.

வெகு அழகான பெருமாள். எனக்கு ஒரு ஆசை. பெரிய பெருமாள் கோவிலில் எப்படி இருக்கிறாரோ அப்படியை என் பெருமாளையும் அழகு செய்யவேண்டும். அரங்கனை வேண்டிக்கொண்டு அதற்கான பொருட்களை சேகரித்தேன். தங்க பெயிண்ட், பல வர்ணங்கள் போன்றவற்றை சேகரித்தேன். முதலில் திருவடியை தங்கமயமாக்கினேன். பிறகு பட்டு பீதாம்பரம், வனமாலை. கடைசியாக மகரகுண்டலம், தங்க கிரீடம். எல்லாம் முடிந்து அழகு பார்த்தேன். அதே சமயம் அரங்கனை சேவிக்க சென்றேன். அன்று ஏனோ பெரிய பெருமாள் ஜகத் ஜோதியாய் காட்சியளித்தார். வர்ணிக்கமுடியாத அழகு. மனதில் ஒருநிச்சலமான ஒரு அமைதி. வீட்டிற்கு வந்தேன். என்ன ஆச்சர்யம்! என் பெருமாளும் அப்படியே இருந்தார். என்னை அறியாமலேயே தத்ரூபமாக பெருமாள் அப்படியே என் கிருஹத்தில் வந்து குடியேறி இருக்கிறார்.
என்னே அவன் கருணை, ஸௌலப்யம்.

10. கொண்டல்வண்ணனை கோவலனாய் வெண்ணெ
யுண்டவாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை*
அண்டர்கோன் அனியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள்* மற்றொன்றினைக் காணாவே //

மேகம் போன்ற நிறமுடையவனாய் இடையர் குலத்தில் பிறந்து வெண்ணையை உண்ட திருவாயை உடையவனாய் என் மனத்தை கவர்ந்தவனாய் அண்டத்துக்குள் உள்ள பிரமன் முதலியோருக்கு தலைவனாய் அழகிய திருவரங்கத்தில் அவதரித்தவனாய் எனக்கு அமுதமாக நின்றவனை காணப்பெற்ற கண்கள் வேறொன்றையும் காணமாட்டா.

                                                                               திருப்பாணாழ்வார்-அமலநாதிபிரான்.

10. பாதாம்போஜம் ஸ்ப்ருசதி பஜதே
ரங்கநாதஸ்ய ஜங்காம்
ஊரு த்வந்த்வே விலகதி சநை
ரூர்த்வ மப்யதே நபிம்
வக்ஷஸ்யாஸ்தே வலதி புஜயோர்
மாமிகேயம் மநீஷா
வக்த்ராபிக்யாம் பிபதி வஹநே
வாஸதாம் மௌளி பந்தே //

என்னுடைய புத்தியானது திருவரங்கனின் திருவடியை தொடுகின்றது. கணைக்காலை சேவிக்கின்றது. இரு தொடைகளின் மேல் மெள்ள பதிகின்றது. மேலே திருவந்தியை காண்கிறது.திருமார்பில் பிராட்டியை சேவிக்கின்றது. திருக்கையில் சங்கும், சக்கிரத்தை காண்கிறது. திருமுகத்தின் காந்தியில் லயித்துவிடுகிறது. கிரீடத்தின் அழகில் ஈடுபடுகிறது. என் புத்தி ஒரு பெண். ஒரு பெண் தானே தன் நாயகனின் அழகை பருகமுடியும்.

சேதனன்:
நான் 14-வருஷம் ஸ்ரீரங்கத்தில் தங்கி பெருமாளை அனேகமாக எல்லா நாட்களிலும், முக்கியமாக பண்டிகை நாட்களில் அரங்கனை சேவித்திருக்கிறேன். உனக்கு பரிபூரணமான திருப்தி கிடைத்ததா? என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வேன். எவ்வளவு நேரம் நின்று சேவித்தாலும் அடுத்த நிமிடம் அரங்கனிடத்தில் எதோ ஒன்றை காண மறந்துவிட்டோமா என்று ஒரு சபலம். பாதாதி கேசம் வரையில் பல தடவை சேவித்திருக்கிறேன் ஆனாலும் அவனை முழுமையாக அனுபவிக்கமுடியவில்லையே என்ற ஏக்கம் என் உள்ளே சதா ஏங்குகிறது. அனேகமாக எல்லோருக்குமே இந்த அனுபவம்.

11. காந்தோதாரை ரயமிஹ புஜை:
கங்கண ஜ்யா கிணாங்கை:
லக்ஷ்மீதாம்ந: ப்ருதள பரிகை:
லக்ஷிதாபீதி ஹேதி:
அக்ரே கிஞ்சித் புஜக சயந:
ஸ்வாத்மநைவாத்மந: ஸந்
மத்யேரங்கம் மம ச ஹ்ருதயே
வர்த்ததே ஸாவரோத:

அழகியவனாய் கொடையிற்சிறந்தவனாய் கைவளையல்கள், கங்கணம் இவைகளின் தழும்புகள் கையில் பதியப்பெற்றவனாய் பெரிய பிராட்டி உறையும் திருமார்புக்கு பாதுகாப்பாக உள்ள திருக்கைகளில் அபயமளிக்கும் திருவாயுதங்களை காட்டிக்கொண்டு இருப்பவனாய், ஆதி சேஷன் மீது பள்ளிகொண்டிருப்பவனாய் இந்த திருவரங்கன் திருமாமணி மண்டபத்தில் பெரிய பெருமாளுக்கு சற்று முன்னே உபய நாச்சிமார்களுடன் பகதர்கள் மனதிலும் என் மனதிலும் உறைகின்றான்.

12. ரங்காஸ்தானே ரஸிக மஹிதே ரஞ்ஜிதாசேஷ சித்தே
வித்வத் ஸேவா விமல மநஸா வேங்கடேசேந க்லுப்தம் /
அக்லேசேந ப்ரணிஹித தியா மாருருக்ஷோ ரவஸ்த்ரம்
பக்திம் காடாம் திசது பகவத் த்யாந சோபாந மேதத் //

பகவத் விஷயத்தில் மனதை செலுத்தியவர்களால் போற்றப்பட்டதாய், எல்லோருடைய உள்ளத்திலும் மிக்க மகிழ்விப்பதாய் உள்ள திருவரங்கம் என்னும் திவ்ய க்ஷேத்திரத்தில் பாமரர்கள், ஞானிகள், ப்ரம்மவித்துக்கள் பணிவிடையால், தூய உல்லம்கொண்ட வேங்கடேசன் என்னும் கவியால் இந்த பகவத் த்யாந சோபானம் என்னும் ஸ்தோத்ரம்-அரங்கனின் மோக்ஷ சாம்ராஜ்யத்தை கஷ்டமின்றி அடைய உறுதியான பக்தியை அளிக்கட்டும்.

                                                             ஸ்வாமி தேசிகன்-பகவத் த்யான சோபாநம்.

சேதனர்கள்:

பகவானை அடைய மிக எளிதான மார்க்கம்-நாம சங்கீர்த்தனமும் அவனை அர்ச்சா மூர்த்தியாக பல பல அலங்காரத்துடன் கண்டருளுவதும் தான். மும்மூர்த்திகளான- அரங்கன்-ஸ்ரீநிவாசன்-வரதன் இவர்கள் எல்லோரும் ஒருவரே. அந்த அந்த க்ஷேத்திரத்தில் அவர் அவர்கள் அழகு காண கண்கொள்ளா காட்சி. எல்லோரும் பக்தர்களுக்கு தங்கள் குணங்களான-ஸோலப்யம், காருண்யம், தயை போன்ற குணங்கலாள் கடாக்ஷித்து நம்முடைய குறைகளை ஒரு விநாடியில் தீர்த்து வைக்கின்றான். நம்மிடம் அவன் எதிர்பார்ப்பது ஒன்றே தான்- திடமான நம்பிக்கை. அதற்கு நானே சாக்ஷி-நொடிந்துபோய் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அவனிடம் ஓடி கதறி அழுதேன்-அடுத்த நாளே எனக்கு விடிவு காலத்தை ஏற்படுத்திகொடுத்த வள்ளல்.

R.Jagannathan.

Tuesday, October 26, 2010

அரங்கமும், அரங்கனும்- 8


அரங்கமும், அரங்கனும்- 8

           
சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன் தலைபத்து
உதிரவேட்டி* ஓர் வெங்கணையுய்த்தவன் ஓதவண்ணன்*
மதுரமா வண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான்*
உதரபந்தம் என்னுள்ளத்துள் நின்று உலாகின்றதே.

வலியமான பெரிய மதிள்சூழப்பெற்ற இலங்கை நகருக்கு அரசனான ராவணன் தலை பத்தும் உதிரும்படியாக ஓர் கொடிய அம்பை ஓடவிட்டு பிழைப்பித்தவனாய்; கடல் போன்ற நிறமுடையவனாய் இனிய பெரிய வண்டுகள் இனிமையாக பாட, பெரிய மயில்கள் நடனம் புரிய-கண் வளர்ந்தருளுகிற- அரங்கன் திருவயிற்றின் மேல் அணியப்பட்ட ஒட்டியானம் ( அரைப்பட்டை ) நிலையாய் நின்று லீலைகள் புரிகின்றது.

எம்பெருமான் கயிற்றில் கட்டப்பட்ட திருவயிற்றை சேவித்தால் ஸம்ஸார பந்தம் நீங்கி மோக்ஷத்தை தருபவன் அரங்கன்.
                                                         திருப்பாணாழ்வார்- அமலநாதிபிரான்

காமாராம ஸ்த்திர கதளிகா ஸ்தம்ப ஸம்பாவநீயம்
க்ஷொமாச்லிஷ்டம் கிமபி கமலா பூமி நீளோபதாநம்
ந்யஞ்சத் காஞ்சி கிரண ருசிரம் நிர்விசத்யூரு யுக்மம்
லாவண்யௌக த்வயமிவ மதிர் மாமிகா ரங்கயூத: //

மன்மதனது தோட்டத்தில் உறுதியாயுள்ள வாழை மரக்கட்டைகள் போல நினக்க உரியதாய், பீதாம்பரத்தை அணிந்தாய்; பூமி பிராட்டி, நீளை பிராட்டி, பெரிய பிராட்டி- இவர்களுக்கு தலை அணியாய், வீசும் மேகலை போல மிக அழகான, அற்புதமான அரங்கன் என்னும் வாலிபன் இரு தொடைகளை என் புத்தி அனுபவிக்கின்றது

                                                              ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்
சேதனன்:

பகவானின் திருவடியை சேவித்துவிட்டு, அவன் கால் தண்டையையும், திரு ஒட்டியாணத்தை காண மனம் தவிக்கின்றது. இந்த நிலையில் பகவானின் அழகிய பட்டு பீதாம்பரம் அணிந்த இரு தொடைகளும் நம் முன்னே நிற்கின்றன. அவை தான் என்ன அழகு-வாழை குறுத்து போல் நீண்டு, காவேரி இரு கிளைகளாக பிரிந்து ஓடுவது போல அற்புதமான காட்சி. திருமகளும் நில மகளும் இந்த தொடையை தானே தலை அணியாக வைத்து சற்று கண் அயர்கிறார்கள்.

இடுப்பில் அணியபெற்றிருக்கும் பட்டை பலவிதமான கற்களாலும் தங்கத்தாலும் செய்யப்பட்டது. அவன் இதை அணிந்திருக்கும் அழகு நம்மை கிருஷ்ணாவதாரத்திற்கு இழுத்து செல்லுகிறது. கண்ணன் எங்கும் ஓடிவிடாதபடி அவனை யசோதை கயிற்றால் கட்டி வைப்பாள். அந்த கயறு அழுந்தி கண்ணன் இடுப்பில் தழும்பு காணும்- அதை காணும்போது யசோதை அழுதுவிடுவாளாம்-கன்ணனுக்கு எப்படி வலி உண்டாகி இருக்கும் என்று நினைத்து. அரங்கனின் இந்த அழகு தோற்றம் நம்மை ஈர்ந்துவிடுகிறது.

5. பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கிவைத்தான் வைத்தன்றி எண்ணுள் புகுந்தான்
கோரமாதவம்செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு
வாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
                                                         திருப்பாணாழ்வார்அமலநாதிபிரான்

பெரும் சுமைகளான பழமையான என் பாபங்ககளை வேரறுத்து என்னை தனக்கு அடியனாக ஆக்கினான். அப்படிசெய்ததன்றி என் உள்ளத்தில் புகுந்தான். இப்படி தன்னை பற்றுமாறு நிற்பதில்லை எம்பெருமான். அனாதிகாலமாக நான் வழி தப்பி கொடிய பாபங்களையே செய்ததால் அவன் என்னை இழந்துவிட்டான். ஆனாலும் என்னை மீண்டும் பெறுவதற்கு அவனுக்கு ஆசை. அதற்காக கோர தவமும் செய்ய துணிந்தான். அதற்கு இடமாக காவேரி பாயும் திருவரங்கத்தை கொண்டான்.

இப்படி அற்பமான என் விஷயத்தில் கருணை கொண்டவன் எப்படிப்பட்டவன்? கணப்பொழுதும் பிரியாத பெரிய பிராட்டி அமரும் திருமார்பையுடையவன்-திருவரங்கன். அந்த திருமார்பு என்னை அடிமையாக்கி கொண்டதே- தாஸனாக்கி கொண்டதே!

5. ஸம்ப்ரீணாதி ப்ரதிகலமஸௌ மாநஸம் மே ஸுஜாதா
    கப்பீரவாத் க்வசந ஸமயே கூடநிக்ஷிப்த விச்வா
   நாளீகேந ஸ்ப்புரித ரஜஸா வேதஸோ நிர்மிமாணா
   ரம்யாவர்த்த த்யுதி ஸஹசரீ ரங்கநாதஸ்ய நாபி: //

அழகிய தோற்றமுடையதாய், ஆழமாயிருப்பதாய், உலகத்தையே ஒரு சமயம் தன்னுள்ளே அடக்கிகொண்டதாய், தூள்கள் மிளிர பெற்றதாய்,தாமரைப்பூவால் பிரமனை படைத்தாய், அழகிய சுழல்களுடன் விளங்குகின்ற திருவரங்கனது நாபி கமலம் என்னுள்ளத்தே புகுந்து மகிழசெய்கின்றது .

                                                               ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்.

சேதநர்கள்:

 அரங்கன் யோக நித்திரை செய்யும்போது அழகாக நம்மை பார்த்துக்கொண்டு சயனித்திருப்பான். மார்பில் திருமகளோடு அழகிய திருவாபரணம். அந்த திருவாபரணத்துக்கும், அரை சிவந்த ஆடை அதன்மேல் பட்டை- இவ்விரண்டிற்கும் இடையில் அரங்கனது நாபி கமலத்தை காணலாம். திருமகளின் கருணையும், பட்டை மிளிரும் ஜோதியும் பட்டு நாபி கமலம் பல  மடங்கு பிரகாசித்து நம் உள்ளத்தை தூய்மையாக்குகிறது.

6.துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன்* அஞ்சிநிறைய
   வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேய அப்பன்
   அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை* முற்றும்
  உண்டகண்டம்கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே!

சிறிது பகுதியான தலையில் வெண்மையான சந்திரனை தாங்கிகொண்டிருக்கும் பரமசிவன் துக்கத்தை போக்கியவனாய் அழகிய சிறகுகள் உடைய வண்டுகள் வாழ்கின்ற சோலைகள் சூழ்ந்த ஸ்ரீரங்கத்திலே நித்ய வாசம் செய்கின்ற- உலகுக்கெல்லாம் தந்தையான அரங்கன் அண்டத்துக்குட்பட்ட தேவர்களையும், அண்டங்களையும், அதற்குட்பட்ட ஆவரணங்களையும் விசாலமான பெரிய பூமியையும், ஏழுகுல பர்வதங்ககைளையும், மற்றும் சகலத்தையும் விழுங்கிய திருக்கழுத்து அடியேனை உஜ்ஜீவிக்க செய்கிறது.
                                                                                        திருப்பாணாழ்வார்- அமலநாதிபிரான்.

6. ஸ்ரீவத்ஸேந ப்ரதித விபவம் ஸ்ரீபத ந்யாஸ தந்யம்
    மத்யம் பாஹ்வோர் மணிவர ருசா ரஞ்சிஜிதம் ரங்கதாம்ந:
    ஸாந்த்ரச் சாயம் தருண துளஸீ சித்ரயா வைஜயந்த்யா
   ஸந்தாபம் மே சமயதி திய: சந்த்ரிகோதார ஹாரம் //

ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவினால் விளங்குவதால் , பெரிய பிராட்டி திருவடி வைப்பதால் பாக்கியம் பெற்றதாய், கௌஸ்துபம் என்னும் ரத்னத்தால் செந்நிறமாக்க பெற்றதாய், பசுமையான திருத்துழாயினால் பல வர்ணங்கொண்ட வைஜயந்தி வனமாலையால் குளிர்ந்த ஒளி மிகுந்ததாய், அழகிய முத்து மாலையுடையதாயுள்ள, அரங்கனின் இரு தோள்களுக்கு இடையில் உள்ள திருமார்பு என் உள்ளத்தின் தாபத்தை ஒழிக்கின்றது.
                                                                         ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்

 சேதனன்:

அரங்கனை ஒரு நிமிஷ அவகாசத்தில் சேவித்தாகவேண்டும். திருவடியிலிருந்து அழகான பட்டை-( ஒட்டியானம் ) வரை சேவித்தாயிற்று. அன்று அரங்கனுக்கு பெரிய ஆபரணம் கழுத்திலிருந்து பட்டை வரை சாத்தியிருந்தார்கள். பரந்த விசாலமான தோள்கள். ஆபரணத்தை ஒட்டி பெரிய வைஜயந்தி மாலை. திருமார்பிலே பெரிய பிராட்டியார்- பிராட்டி இல்லாமல் பகவான் இருக்கமாட்டான்-இணைபிரியாத தம்பதிகள். நம் கண் அகல மறுக்கின்றது- சாத்தான் தள்ளினாலும் நகர மறுக்கின்றது நம் கண்கள்.

7. கையனார்சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல்
    மெய்யனார் துளபவிரையார் கமழ்நீள்முடி எம்
    ஐயனார் அணியரங்கனார் அரவிணைமிசைமேயனார்*
   செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.

திருக்கையில் ஒரு பக்கம் வலம்புரி சங்கையும், மறுகையில் தீய் உமிழ்கின்ற சக்கிரத்தை உடையவனாய் பெரிய மலை போன்ற திருமேனியுடையவனாய், திருத்துழாய் மணம் மிகும்படி-நீண்ட கிரீடத்தை தரித்தவனாய் எனக்கு தந்தையான திருவரங்கத்தில் உள்ளவனாய், ஆதி சேஷன் மீது பள்ளிகொண்டவனாய், ஆச்சர்யமானவரான அரங்கனின் சிவந்த திருவாய் என் சிந்தையில் புகுந்து கவர்ந்துகொண்டது என்ன அதிசயம்!

                                                                                       திருப்பாணாழ்வார்-அமலநாதிபிரான்.

7. ஏகம் லீலோபஹிதமிதரம் பாஹு மாஜாநு லம்பம்
    ப்ராப்தா ரங்கேசயது ரகில ப்ரார்த்தநா பாரிஜாதம்
    த்ருப்தா ஸேயம் த்ருட நியமிதா ரச்மிபிர் பூஷணாநாம்
   சிந்தா ஹஸ்திந் யநுபவதி மே சித்ரமாலாந யந்த்ரம். //

திருவரங்கத்தில் பள்ளிகொண்ட- எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றவல்ல- அரங்கனுடைய வல கையை தலையணியாக்கிகொண்டு, மற்றொரு கை முழந்தால் வரை நீண்டு- இதைகண்ட என் நினைவென்னும் பெண் யானை இருமார்புடன்-திருவாபரணங்களின் ஒளியால் கட்டப்பட்டு அவனின் அழகை அநுபவிக்கிறது.

                                                                            ஸ்வாமி தேசிகன்-பகவத் த்யாந ஸோபாநம்.

சேதனன்:

ஒரு மணி நின்று ஒருவழியாக திருமாமணி மண்டபத்துக்குள் நுழைந்து கற்ப க்ரஹத்தில் உள்ளே அரங்கனை காண விழைந்தேன். சந்நதி முன்னே அரங்கனை அர்ச்சா மூர்த்தியாக-அழகிய மணவாளனாக கண்டேன். காண கண் கொள்ளா காட்சி. அடுத்து என் கண் பெரிய பெருமாள்  பேரில் சென்றது. கம்பீரமான திருமுகம். ஒரு சிறிய புன்னகை. வைத்த கண் எடுக்கமுடியவில்லை. அனாதிகாலமாக இப்படியே தான் நம் முன்னோர்களுக்கும்-ஆசார்யர்களுக்கும், ஆழ்வார்களுக்கும் அரங்கன் சேவை சாதித்துக்கொண்டிருக்கின்றான். அவர்கள் கோஷ்டியில் நானும் சேர்ந்திருக்கின்றேன் என்று நினைக்க பெருமிதமாயிருந்தது.

R.Jagannathan.




Friday, October 22, 2010

அரங்கமும், அரங்கனும்- 7

அரங்கமும், அரங்கனும்- 7



ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யர்கள்- அகோபில மடம், பௌண்டரிகபுரம், பெரிய ஆண்டவன் போன்ற ஆஸ்ரம ஸ்வாமிகள்- ஸ்வாமி தேசிகனின் பகவத் த்யாந சோபானம், பாணாழ்வாரின்முனிவாஹந போகம்- இவற்றிற்கு நிறைய விரிவுரைகள் எழுதி இருக்கிறார்கள். இவைகள் இரண்டுமே அரங்கனை பற்றித்தான். வைகுண்ட ப்ராப்தி கிடைக்கவேண்டும் என்றால் அரங்கத்திற்கு வா- அரங்கனை சரணம் அடை என்று சேதநர்களான நம்மை கூவி அழைக்கிறார்கள். சுலபமாக நாம் கரையேற வழி காண்பிக்கிறார்கள். இதற்கு பக்தி யோகமோ, ஞானயோகமோ தேவையில்லை-அரங்கனை சரணம் அடைந்தாலே போதும்.

எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை: ஸ்வாமி தேசிகன் ஆசார்யர். பாணாழ்வார்-ஆழ்வார். இவர்கள் இருவருமே 12-பாசுரங்களால் அரங்கனை அனுபவித்துள்ளார்கள்- திருவடி முதல் திருமுடி வரையிலும். நாமும் அரங்கனை பலதடவை அநுபவித்துள்ளோம். இவைகளுக்கு எப்படி வியாக்கியானம் அமைந்துள்ளது என்று சுவைக்க ஆசை.

1. அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
    விமலன்* விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன்
    நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்க்த்தம்மான்
   திருக் கமலபாதம்வந்து எங்கண்ணினுள்ளன ஒக்கின்றதே!


   குற்றமற்றவனாய், எல்லா உலகங்களுக்கும் ஒரே காரணாய்; மஹாபரோபகாரனாய் பாகவதற்கு; அடியேனை தாஸனாக்கிய; எப்போதும் எவ்வகை குற்றமற்றவனாய்; நித்யசூரிகளுக்கு தலைவனாய்;மணம் நிறைந்த சோலைகளுடைய; திருமலையில் நிற்பவனாய்; அடியார்க்கு வசப்பட்டவனாய்; அடியார்களின் குற்றத்தை காணாதவனாய்; நீதியை நடத்தும் பரமபதத்தில் இருப்பவனாய்; நீண்ட மதிள்கள் கொண்ட திருவரங்கத்தில் பள்ளி கொண்ட என் ஸ்வாமியின் பெருமையுடைய தாமரை போன்ற திருவடிகள் தானே வந்து என் கண்ணுக்குள்ளே அகப்பட்டு அருகே நிற்கின்றன.
                                                                               திருப்பாணாழ்வார். அமலநாதிபிரான்   

1. அந்தர் ஜ்யோதி: கிமபி யமிநாம்     அஞ்ஜநம்  யோக த்ருஷ்டே:
   சிந்தா ரத்நம் ஸுலப மிஹ ந:      ஸ்த்தி மோக்ஷாநுரூபம்
   தீநா நாத வ்யஸநசமநம்     தைவதம் தைவதாநாம்
   திவ்யம் சக்ஷு: ச்ருதிபரிஷதாம்     த்ருச்யதே ரங்கமத்யே //

                     
அரங்கத்திலே ஜோதிவடிவாய் ஓர் ஆச்சர்ய வஸ்து- யோகிகளின் இருதயத்தில் பிரகாசிக்கின்றதாய், ஞான கண்ணுக்கு மை போன்றதாய், இவ்வுலகில் நமக்கு எளியதான இம்மை போகங்கள், மோக்ஷம் இவைகளை தரவல்ல சிந்தாமணி   போன்றதாய், அசக்தர்களுடையவும், அநாதர்களுடையவும் துன்பத்தை ஒழிப்பதாய்; வேதராசிகளுக்கு தெய்வீக கண்போன்றதாய்; எல்லா தெய்வங்களுக்கும் மேற்ப்பட்ட தெய்வமாய் ஒரு வஸ்து திருவரங்கத்தின் நடுவில் காணப்படுகிறது
                                                            ஸ்வாமி தேசிகன்.ஸ்ரீ பகவத் த்யாந ஸோபாநம்
சேதனர்கள்   


நாம் ஸ்ரீரங்கத்திற்கு காலடி வைத்ததும் ஓடி சென்று காவேரியில் நீராடி அரங்கனை காண விரைகிறோம். நம் சிந்தனையெல்லாம் அரங்கனின் அழகை காண துடிக்கின்றன. கால் கடுக்க நின்று திருமாமணி மண்டபம் நுழைந்த உடனே அரங்கனை காண்கின்றோம். ஆகா என்ன அழகு. நிற்கும் சில நிமிஷங்களில் பெரிய பெருமாள் திருவடி முதல் திருமுடி வரையில் சேவிக்கின்றோம், கூடவே அழகிய மணவாளனையும் உபய நாச்சிமார்களையும் காண்கின்றாம்-திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவனின் அழகை மறுபடியும் காண துடிக்கின்றோம். வெளியில் வந்தவுடனேயே அந்த காட்சி மறைந்துவிடுகிறது. இன்னும் சரியாக சேவிக்கவில்லையே என்று ஏங்குகிறாம்! 

இந்த அனுபவம் எல்லோருக்கும்-இதில் பேதமே கிடையாது, ஆண், பெண் என்ற வித்யாசம் கிடையாது, ஏழை, தனவான் என்ற பேதம் கிடையாது, ஜாதி வித்யாசம் கிடையாது. நம் எல்லோரையும் அணைத்து ஒன்று சேர்க்கும் அரங்கனின்  கருணையே கருணை.

2.   உவந்த  உள்ளத்தனாய் உலகமளந்து அண்டமுற
      நிவந்த * நீன்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை *
      கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான்* அரைச்      சிவந்த ஆடையில்  மேல் சென்றதாம் என் சிந்தனையே.


ஆழ்வார் கமல பாதத்தை தரிசனம் செய்துவிட்டு தன் கண்களை அரங்கன் அணிந்திருக்கும் பட்டு பீதாம்பரத்தில் செல்ல விடுகின்றார்.அப்போது அவர் சிந்தையில் பகவானுடைய திருவிக்ரம அவதாரம் காண்கிறது. மூவடி நிலம் வேண்டி பலியின் செறுக்கை அழித்து இந்திரர்களுக்கு ராஜ்யத்தை மீட்டு கொடுத்த காட்சி, பிரம்மன் அவனுடைய திருவடிக்கு கங்கையின் நீரால் அபிஷேகம் செய்த காட்சியும் அந்த நீர் சிவன் தலையில் தாங்கி கொள்ள-அப்படி வளர்ந்த பெருமான் யாரும் கேட்காமலேயே நம் எல்லோருடைய தலையிலும் வைக்கிறான். அவன் திருவடி மேலே போக போக அவனுடைய கிரீடமும் வளர்கின்றது மேலே ஒருபொன்னான குடையை கவிழ்த்ததுபோல் விளங்கியது. தேவர்கள் இழந்த இடங்களை மீட்டு கொடுத்த அந்த எம்பெருமான் சோலைகள் சூழ் அரங்கத்திலே கோயிலாழ்வாருக்குள்ளே கண் வளர்ந்தருளுகிறான். அவன் திருவரையில் அணிந்திருக்கும் சிவந்த ஆடை-அசுரர்களை அழித்தபோது தெறிக்கப்பட்ட இரத்த கரை பட்டு சிவந்ததோ! அனாதி காலமாக பெண்களின் ஆடைமீதே சென்ற என் மனம் இப்பொழுது அரங்கன் திருவடியை கண்டு  அனுபவித்துக்கொண்டே அவன் பட்டு பீதாமபரத்தில் போய் நின்றுவிட்டது.   

                                                                    திருப்பாணாழ்வார்.  அமலநாதிபிரான்         

2.   வேலாதீத ச்ருதி பரிமளம் வேதஸாம் மௌளி ஸேவ்யம்
       ப்ராதுர்ப்பூதம் கநக ஸரித: ஸைகதே ஹம்ஸ ஜூஷ்டே
      லக்ஷ்மீ பூம்யோ: கர ஸரஸிஜைர் லாலிதம் ரங்கபர்த்து:
      பாதாம்போஜம் ப்ரதிபலதி மே பாவநா தீர்க்கிகாயாம் //


எல்லையை கடந்த வேதங்களின் பரிமணம் வீசப்பெற்றதாய்  ப்ரம்ம தேவர்களின் முடிகளால் வணங்கப்பெற்றதாய் அன்னங்கள் விரும்பி உறைகின்ற காவரி ஆற்று மணல் திட்டில் தோன்றியதாய் பெரிய பிராட்டி, பூமிதேவி இவர்களின் திருக்கை தாமரைகளால் வருடபெற்ற அரங்கனுடைய திருவடி தாமரை அடியேனுடைய நினைவென்னும் பொய்கையில் என்றும் நிலையானதாக நிற்கின்றது.
                                                                    ஸ்வாமி தேசிகர் -பகவத் த்யாந ஸோபாநம் 

சேதநர்கள்:

 ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி ப்ரதி வருஷம் மார்கழி மாதத்தில் வரும். அப்போது அரங்கனுக்கு அத்யயந உத்ஸவம்- பகல் பத்து, ராப்பத்து - 22- நாட்கள் நடைபெறும். பகல் பத்தில் அர்ஜுன மண்டபத்திலும், ராப்பத்து திருமாமணி-ஆயிரங்கால் மண்டபத்திலும் பெருமாள் ஏளியிருப்பார்.ஒவ்வொரு நாளும் பெரிய பெருமாளுக்கும், நம்பெருமாளுக்கும் அலங்காரம் காண கண்கொள்ளா காட்சி.

பெரிய பெருமாள் வைகுண்ட ஏகாதசி தினத்திற்கு முதல் நாள் தசாவதார  பட்டு பீதாம்பரம் சார்த்திக்கொண்டு பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இடுப்பில் அழகான ஒட்டியானம் திருவடியோ தங்க தாமரை. பார்க்க பார்க்க திகட்டாத அமுதன்.ச் வெளியில் செல்லும்போதும் அவனை பார்த்துக்கொண்டே தான் பக்தர்கள் வருவார்கள். ஆழ்வார், ஆச்சார்யர் அனுபவித்த பெருமாள் அல்லவா!

மந்திபாய் வடவேங்கடமாமலை* வானவர்கள்
சந்திசெய்யநின்றான் அரங்ககத்தரவினணையான்
அந்திபோல் நிறத்தாடையும் அதன்மேலயனைப் படத்ததோரெழில்
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தினுயிரே //


ஆழ்வாரின் மனது அடுத்து பெருமாளின் திருவந்தியை நோக்கி செல்லுகின்றது. குரங்குகள் கிளைக்கு கிளை பாயுமிடமாய் திருவேங்கடமென்னும் பெரிய திருமலையில் முக்தரும், நித்யரும் கைங்கர்யங்களை ஏற்றுக்கொள்ளும்படி நின்றவனாய், திருவரங்கத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டுள்ளவனான பெரிய பெருமாள், செவ்வானம் போல் நிறத்தையுடைய பீதாமபரமும் அதற்கு மேல் பிரமனை படைத்ததாய் ஒப்பற்ற அழகையுடைய திருவந்தியை இலக்காக கொண்டதன்றோ என்னுடைய மனதில் பிரகாசிக்கின்ற இனிய ஆத்மா, பிராணன் எல்லாம்.

                                                                                திருப்பாணாழ்வார்-அமலநாதிபிரான்

சித்ராகாரம் கடக ருசிபி: சாரு வ்ருத்தா நுபூர்வாம்
காலே தூத்ய த்ருததர கதிம் காந்தி லீலா களாசீம்
ஜாநுச்சாயா த்விகுண ஸுபகாம் ரங்கபர்த்துர் மதாத்மா
ஜங்காம் த்ருஷ்ட்வா ஜநந பதவீஜாங்கிகத்வம்ஜஹாதி //


                                                    ஸ்வாமி தேசிகன்-பகவத் த்யான சோபானம்

ஆசார்யர் -அரங்கன் திருவடியிலிருந்து அரங்கன் கணுக்காலுக்கு தன் மனதை செலுத்துகிறார்.

பகவானின் கால் தண்டைகளின்-ஒளிகளாலே பல வர்ணங்களை வீசி வட்டமாய் அழகான் அமைப்பை கொண்டதாக-எப்போதும் பக்தர்களை காக்க தயாரான நிலையில்( பாண்டவருக்காக தூது சென்ற காட்சி ) முழந்தாளின் எழிலால் அழகு பலமடங்கு பெருகி அரங்கனின் கணுக்காலை ஸேவித்து தன்னை ஸம்ஸார மார்க்கத்திலிருந்து திருப்பி அவன் அடியில் திருப்பிவிடும்-அப்படிப்பட்ட பெருமை வாய்ந்தது-கணக்கால்.
 ( அரங்கனது கணைகாலை ஸேவித்தால்-தான் படும் துன்பங்கள்  அனைத்தும்  நீங்கிவிடும்  என்கிறார் ஸ்வாமி தேசிகர்.

சேதனன்:

ஜ்யேஷ்டாபிஷேகம் முடிந்தவுடன் அரங்கனின் நகை எல்லாம் புதுப்பித்து அரங்கனுக்கு சாத்துவார்கள். பெரிய பெருமாள் அப்போது கணுக்காலில் பெரிய தண்டை சாத்தியிருப்பார். திருவடியோ தங்கம். இரண்டும் சேர்ந்து நம் கண்ணை விட்டு அகலாது பதிந்துவிடும். பகவானை நாம் அனுபவித்தமாதிரி ஆழ்வார்களும்  ஆசார்யர்களும் அனுபவித்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நமக்கு மயிர் கூசுகிறது. காலம் காலமாக இதே நிலையில் பகவான் நம் பிதா, பாட்டனார் என்று ஏழேழு தலைமுறைக்கும் காட்சியளித்து கடை தேற்றியுள்ளார்.


R.Jagannathan.

Saturday, October 16, 2010

அரங்கமும், அரங்கனும்-6

அரங்கமும், அரங்கனும்-6



ஆழ்வார்கள் அரங்கனை அனுபவித்ததை நாமும் அனுபவித்துக்கொண்டு வருகிறோம்.அதோடு கூட நாயக நாயகி பாவனையில் ஆழ்வார்கள் அனுபவித்தை நாமும் அனுபவித்து அவர்களோடு கலந்துவிடுவோம்

முளைக்கதிரை, குறுங்குடியுள் முகிலை, மூவா
மூவுலகமும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை, அரங்கம் மேய
அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை
விளக்கொளியை, மரகதத்தை, திருத்தண் காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன்; வருக என்று
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.
                                        திருநெடுந்தாண்டகம்.

அதிகாலை சூரியன் போல விளங்குபவன், திருக்குறுங் குடியுள் கார்மேகம் போல் தோன்றுபவன், மூவுலங்களையும் கடந்து அப்பால் நின்றவன், பரமபதத்தில் எழுந் தருளியிருப்பவன் , சகல கல்யாண குணங்களை உடையவன் திருவரங்கத்தே துயிலும் தூயன், அந்தணர் சிந்தனையில் உறைபவன், திருவெஃகாவில் விளக்கொளி  பெருமானாய் சேவை சாதிப்பவன், மரகதம் போல குளிர்ச்சியாய் இருப்பவன், பச்சை வண்ணன்- இவ்வாறு கிளி இனியனை பாடகேட்ட தலைவி-தான் வளர்த்த கிளி தனக்கு நல்ல பலனை இப்படி பாடி அளித்தற்காக அன்புடன் அழைத்து அதற்கு அஞ்சலியும் செய்து வணங்கினாள்.

மைவண்ணம் நறுங்குஞ்சிக் குழல்பிந்தாழ
மகரம்சேர் குழை இரு பாடு இலங்கி ஆட
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார், என் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரை; வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம்; அடியும் அஃதே
அவ்வண்ணத்து அவர்நிலைமை கண்டும் தோழீ!
அவரைநாம் தேவரென்று அஞ்சினோமே.
                                     திருநெடுந்தாண்டகம்


ஆழ்வார் நாயகி பாவத்தில்-தோழீ!! அரங்கன் எப்படி என் முன்னே வந்தார்-கறு நிற-நறுமணமிக்கதாய், சுருள்சுருளாக திருக்குழற் கற்றையானது பின்னே அலைந்தது; இரு புறத்திலும் மகரகுணடலங்கள் ஒளியுடன் அசைந்தன. வில்லை துணையாக கொண்டு-இந்த அழகிய கோலத்தோடு தாமும் தம் இளைய பெருமாளுமாக வந்தார். பேராவலோடு வந்தவர் கடல் கண்டு தேங்கினாற்போல என் எதிரில் நின்றார். அவர் கைகளோ செந்தாமரை போல அழகு மிக்கவை. வாயும் தாமரையை ஒக்கும். இரு கண்களும் அத்தாமரையே! திருவடிகளும் அவ்வண்ணமே

அப்படி வந்த பேரழகனை கண்டு அவரோடு கலந்து பரிமாறாமல் அவர் தேவர் என்று அஞ்சி விலகி நின்றேனே! நீ இல்லாததால் அத்தனையும் இழந்தேனே!

வையம் தகளியா, வார்கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக-செய்ய
சுடர்- ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்- ஆழி நீங்குகவே என்று
                          பொய்கை ஆழ்வார்- முதல் திருவந்தாதி.

நம் இடர்களெல்லாம் போக்க கூடியவன்-அரங்கன் . அவன் முன் ஏற்றப்படும் விளக்கோ!
அந்த விளக்குக்கு பூமியே அகல்; அதை சுற்றியுள்ள கடலே நெய்; வெய்ய கதிரோன்- சூரியனே சுடர்- இவைகளேல்லாம் அவன் முன்னே ஏற்றப்படும் விளக்கானால் அவன் எத்துணை பெரியவன்.
இப்படி ஏற்றப்பட்ட விளக்கோடு அவன் திருவடிகளுக்கு மாலை சூடவேண்டாமோ!- இவ்வுலகில் உள்ள இடர்கடல் நீங்கவேண்டும் என்று சொற்களால் இப்பாமாலையை சாற்றினேன்.

அரங்கனுக்கு பாமாலை

அன்பே தகளியா, ஆர்வமே நெய் ஆக,
இன்பு உருகு சிந்தை இடுதிரியா-நன்பு உருகி
 ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன், நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
                                   பூதத்தாழ்வார்- இரண்டாம் திருவந்தாதி.


என்னுள்ளே பகவானை காணமுடியாமல் இருள்மண்டி கிடைக்கிறது. அந்த இருளை விலக்கி அவனை காண-
ஞானம் எனும் சுடர் விளக்கை-அதற்கு அன்பே அகல், ஆர்வமே நெய், மனமே திரி இவற்றை ஏற்றி, ஞானமாகிர ஆத்மா கரையப்பெற்று-பரம ஞானமாகிற சுடர் விடும் விளக்கை நாராயணனுக்கு -(அரங்கனுக்கு) ஏற்றினேன்.

திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்; திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன்; புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால், இன்று.
                                         பேயாழ்வார்- மூன்றாம் திருவந்தாதி.

இப்படி இரு ஆழ்வார்களும் ஏற்றிவைத்த விளக்கின் வெளிச்சத்தில் பகவானை கண் குளிர பார்க்கின்றார்-மூன்றாவது ஆழ்வார்.
பெருமானிடத்தில் பிராட்டியை கண்ட ஆழ்வார்-அடுத்தது பொன் போல யாவரும் மயங்கும் அழகிய பகவானின் திருமேனியை காண்கின்றார். தாயாரும் பெருமாளும் ஜகத் ஜோதியாக மரகதமலையில் உதித்தெழும் பால சூரியனைப்போல  காண்கிறார்கள் . இந்த சேர்த்திக்கு திருஷ்டி படுமோ என்று காத்துவரும் திருவாழியையும்  , பாஞ்ச சன்னியம் என்னும் வலம்புரி சங்கையும் வணங்குகிறார்-ஆழ்வார்

அரங்கனுக்கு பாமாலை

R.Jagannathan.
                          

Tuesday, October 12, 2010

அரங்கமும், அரங்கனும்-5

அரங்கமும், அரங்கனும்



திருமங்கை ஆழ்வார் பகவானோடு நாயகி பாவத்தில் அருளி செய்த பாசுரங்கள் நம்மையும் ஒன்றர கலந்துவிட செய்கின்றன. பக்தர்கள் பகவானை காணாமல் தவிக்கும் தவிப்பே ஏக்கமாக வெளிவருகிறது.

பந்தோடு கயல் மருவாள்; பைங்கிளியும்
   பாலூட்டாள்; பாவை பேணாள்;
வந்தானோ திருவரங்கன், வாரானோ?
   என்றென்றே வளையும் சோரும்
சந்தோகன் பௌழியன் ஐந் தழல் ஓம்பு
   தைத்திரியன் சாம வேதி,
அந்தோ! வந் தென்மகளைச் செய்தனகல்
   அம்மனை மீர்! அறிகிலேனே.


                                       பெரிய திருமொழி-5-5-9
தாய்மார்களே!
விளையாடிக்கொண்டிருந்த இவள் இப்போது பந்தையும், கழற்காயையும் விரும்புவதில்லை. அவள் ஆசையாக வளர்த்துவரும் பைங்கிளிக்கு பாலூட்டவில்லை. சதா அரங்கன் தான்-அழகிய மணவாளன் வந்தானே என்று பிதற்றல்-அவன் வரவில்லையே நான் என்ன செய்வேன்-என் கைவளைகள் நழுவுகின்றதே என்று சோர்ந்து போகிறாள்.

பெண்களே! சாந்தோக்கியம், தைத்திரியம், சாமம் எல்லாம் அறிந்தவன், அதற்கு பொருளாய் இருப்பவன், பஞ்ச வேள்விகள் செய்பவனுமான எம்பெருமான் என் மகளை படுத்துவதை நான் அறியவில்லையே!

பொய்வண்ணம் மந்த்தகற்றப் புலன் ஐந்தும் செலவைத்து
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்நின்ற வித்தகனை
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ணம் மரகத்தின்
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது-தென்னரங்ககத்தே
                                                                   பெரிய திருமொழி-5-7-2-


பெருமாள் நித்திய சூரிகளை தன்னிடத்தே வைத்து அவர்களுக்கு பரமானந்தத்தை கொடுக்கிறார். அவ்வண்ணமே தன்னையும் அனுபவிப்பதற்காக திருவரங்கத்தில் உறைகின்றான் என்று ஆழ்வார் இப்பாசுரத்தில் சாதிக்கிறார்.

இந்த உலக மாயையிலிருந்து மனத்தை அகற்றி ஐம்புலங்களையும் அங்கும், இங்குமாக அலையவிடாமல், அரங்கனையே சிந்திப்பவர்களுக்கு தன்னையே காட்டி அருள்வான் அரங்கன். அவன் அஞ்சன வண்ணன், காளமேகம் போலவும், மரகதம் போலவும் நிறம் படைத்தவன். அவனை அரங்கத்திலேயே கண்டு களிப்புற்றேன்.

பிண்டியார் மண்டை ஏந்தி
   பிறர்மனை திரிதந்து, உண்ணும்
முண்டியாள் சாபம் தீர்த்த
   ஒருவன் ஊர், உலகம் ஏத்தும்
கண்டியூர், அரங்கம், மெய்யம்
   கச்சி, பேர், மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால்
   மற்றையார்க்கு உய்யல் ஆமே?
                                திருக்குறுந் தாண்டவம்- 

பெருமாள் உகந்து உறையும் திவ்ய தேசங்கள் பல. அவன் எப்பேற்ப்பட்டவன்- தலையோட்டை கையில் ஏந்தி அயலார் வீட்டில் இரந்து உண்ணுகிற-தவக்கோலம் பூண்ட பரம சிவனுக்கு சாபம் தீர்த்தவன்- எம்பெருமான். அவன் உறையும் திருப்பதிகள்-கண்டியூர், அரங்கம், திருமெய்யம், திருகச்சி, திருப்பேரூர், திருக்கடல் மல்லை- இங்கு இவைகளை பற்றினவர்கள் உய்வு பெறலாமே தவிர மற்றையோர் உய்ய வழி இல்லை.

வைய்யம் தகளியா, வார்கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக-செய்ய
சுடர்- ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
                                              பொய்கை ஆழ்வார்-முதல் திருவந்தாதி


நம்முடைய புற இருளை மாற்றக்கூடிய ஒரு விளக்கினால் அரங்கனை அறிந்து கொண்டேன். அந்த விளக்கிகாகிய- அகல் - பூமிக்கு  நெய்யாகிய - கடல் - ஊற்றி- சூரியனாகிய வெய்ய கதிரோன்- சுடர்- இப்படி விளக்கேற்றிய அவன் திருவடிகளுக்கு சொல் என்ற மாலையை சூட்டி-அந்த சக்கிர படையை ஏந்தியவனின் திருவடிகளை வணங்கி இவ்வுலகில் உள்ள இடர்கள் நீங்கவேண்டும்- என்று இறைஞ்சுகிறார் ஆழ்வார். சகல வியாதிகளையும் தீர்க்கும் அரு மருந்து பகவானின் திருவடிகளே!

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்
இன்று மறப்பேனோ ஏழைகாள்? அன்று
கருஅரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கன் மேயான் திசை.


அரங்கன் எனக்கு செய்த நன்மைகள் எத்தனையோ! அவைகள் ஒன்றையும் நான் மறக்கமுடியுமா- ஆழ்வார் ஏற்றிய சொல் மாலையில் ஏற்றீ வைத்த விளக்கினால்- அந்த ஒளியினால் பெருமானை அரங்கத்திலே கரு மண்டபத்திலே பொன்போல் விரும்பத்தக்க அழகிய திருமேனியை கண்டேன்.

R.Jagannathan.

Wednesday, October 6, 2010

அரங்கம், அரங்கனின் சிறப்பு- 4

அரங்கம், அரங்கனின் சிறப்பு- 4


திருப்பாணாழ்வார் பகவானுக்கு திருமஞ்சனத்திற்கும், தளிகைக்கும் பானை செய்து தரும் குழவன் ஜாதியை சேர்ந்தவர். ஆனால் அவர் நினைவெல்லாம் அரங்கனே! அவர் அருளிசெய்த பாசுரம்-அமலனாதிபிரான்.

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு
   என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன்
   விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன்
   நீள்மதிள் அரங்கத் துஅம்மான் திருக்
கமலபாதம் வந்து என் கண்ணின்
   உள்ளன ஒக்கின்றதே!


ஒரு குறையும் இல்லாத கோவிந்தன், உலக தோற்றத்திற்கு காரணம் ஆனவன், உபகாரகன், சிறிமை பாராது அடியார்களுக்கு அருள் பாலிப்பவன், வைகுண்ட வாசிகளுக்கு தலைவன், மணம் மிக்க சோலைகள் அடங்கிய திருவேங்கடமலையிலிருந்து அரங்கத்திற்கு வந்தவன், அடியார்களிடம் குறை காணாதவன், நீதியை காப்பவன், அரங்கத்தில் யோக நித்திரை செய்பவன்-அவனுடைய அழகிய திருவடி தாமரை என் கண்ணில் புகுந்து எங்கும் அலைய விடாது பிரகாசிக்கின்றது.

ஆலமா மரத்தின் இலைமேல்
  ஒருபா லகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து
   அரவின் அணையான்
கோலமா மணிஆரமும் முத்துத்
தாமமும் முடிவுஇல்லது ஓர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை
கொண்டது என் நெஞ்சினையே!


பெரியதான ஆலமரத்தின் ஒரு சிறிய இலைமேல் சிறிய பிள்ளையாகி ஏழு உலங்களையும் தன்னுள்ளே அடக்கிக்கொண்டவன், திருவரங்கத்திலே திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு கண் வளர்பவன்-அழகிய ரத்தினகற்களால் செய்யப்பட்ட மாலைகளை தரித்திருப்பவன், முத்து வடங்களை அணிந்திருப்பவன் அவைகளுக்கு சோபை தரும் நீல திருமேனியை உடையவன்-அவன் என் நெஞ்சத்தில் புகுந்து கொள்ளை கொண்டு போயிற்றே! ஐயோ ! இதற்கு நான் என்ன செய்வேன்.

கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணைய்
உண்டவாயன்  என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றுஒன்றினை காணாவே //
                                          அமலனாதிபிரான்.


நெடுங்காலம் காவேரி கறையில் மனத்தால் மட்டும் அரங்கனை-அனுபவித்த பானருக்கு திருமாமணிமண்டபத்துக்குள்ளேயே இரு தூண் அருகில் இருந்து அனுபவிக்கும் போது பிறந்த பாசுரம் இது.
அன்று ஆயர்பாடியில் இடை பிள்ளையாக வெண்ணை உண்ட திருவாயை இங்கு காண்கிறேன் அவ்வெண்ணை போல என் நெஞ்சம் முழுதும் நிறைந்திருப்பவனே! அரங்கத்திற்கே ஆபரணமாக யோக நித்திரை செய்பவனை-எனக்கு அமுதமாக தித்திக்கும் அழகிய மணவாளனை கண்ட என் கண்கள் வேறொன்றும் காணமாட்டா.

பூண்முலைமேல் சாந்து அணியாள்; பொருகயல்கண்
  மை எழுதாள்; பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான்
   திருவரங்கம் எங்கே? என்னும்
நாண்மலராள் நாயகனாய் நாமறிய
   ஆய்பாடி வளர்ந்த நம்பி
ஆண்மகனாய் என் மகளைச் செய்தனகள்
   அம்மனை மீர்! அறிகிலேனே!


                                            பெரிய திருமொழி-5-5-5
திருமங்கை ஆழ்வார் தன்னை பரகால நாயகியாகவே பாவித்து அரங்கனை அனுபவித்தார். அரங்கனிடம் மனம் பறிகொடுத்த நாயகியின் துன்பத்தை கண்ட அவள் தாய்-பெருமாளை இவளோடு சேக்கவும் முடியவில்லை-இவளையும் நோவு படாமல் காக்கவும் முடியவில்லை என்று கலங்கி நிற்கின்றாள்.

என் மகள் தானே ஆபரணமாக இருக்கும் தனங்களின் மேல் சந்தனம் பூசிக்கொள்ளமாட்டேன் என்கிறாள்.கண்களில் மை எழுத மாட்டேன் என்கிறாள். பூச்சூட மறுக்கிறாள். வேறு பொருட்களின் மேல் நாட்டம் இல்லை. சதா என் சர்வேச்வரன் இருக்கும் திருவரங்கம் எங்கே? என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். இவளை இப்பாடு படுத்தும் தலைவன் யார் என்றால்-தாமரை பூவில் வாசம் செய்யும் பிராட்டிக்கு தலைவன்-ஆயர்பாடியில் வளர்ந்த என் நம்பி-பெரிய ஆண்பிள்ளையாக என் மகளுக்கு செய்தனவற்றை நான் அறிந்தேன் இல்லையே?

to be continued.....

R.Jagannathan.

Tuesday, October 5, 2010

அரங்கம், அரங்கனின் சிறப்பு-3

அரங்கம், அரங்கனின் சிறப்பு-3


திருவரங்கம். திருஅரங்கன் சிறப்புகளை ஆழ்வார்கள் அனுபவித்ததை உங்களுக்கு அளித்துவருகிறாம். 12-ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள் அரங்கனை மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள் . அவைகள் தேனூறும் பக்தி ததும்பும் பாசுரங்கள். சொல்ல சொல்ல, படிக்க, படிக்க திகட்டாதவைகள்.

வேதநூற் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
  பாதியும் உறங்கிபோகும்; நின்றதிற் பதினையாண்டு
பேதைபா லகன தாகும்; பிணிபசி மூப்புத்துன்பம்
  ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே!
                                             தொண்டரடிபொடி ஆழ்வார்-திருமாலை


வேதங்கள் சொல்படி மனிதர்கள் நூறு ஆண்டு ஆயுள் காலத்தை பெற்றாலும், அதில் பாதி பாழாய் போன தூக்கத்தில் போய்விடுகிறது.மீதி பாதியில் அறியாத  குழந்தை பருவத்திலு, பாலக பருவத்திலும், சிற்றின்பத்திலேயே கழியும் இளைஞர் பருவத்திலும் போய்விடுகிறது. மிகுதி நோய், பசி, மூப்பு இப்படியாக போய்விடுகிறது-ஆதலால்   ரெங்கா! இப்பிறவியை நான் ஒருபோதும் வேண்டமாட்டேன்.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
  வடதிசை பின்பு காட்டி தெந்திசை இலங்கை நோக்கி
கடல்- நிற கடவுள்  எந்தை அரவணைத்தியிலுமாகண்டு
  உடல் எனக்கு உருகுமாலோ! என்செய்கேன் உலகத்தீரே!
                                                                                திருமாலை

               
ஊர் இலேன், காணி இல்லை, உறவு மற் ரொருவர் இல்லை;
  பாரில் நின் பாதம் மூலம் பற்றிலேன்; பரம மூர்த்தி!
காரொளி வண்ணனே! கண்ணனே! கதறுகின்றேன்;
ஆரு உளர் களைகண்? அம்மா! அரங்கமா நக ருளானே!
                                                                             திருமாலை

பெருமாளே! நீர் உகந்திருக்கும் ஊர்களில் நான் பிறக்கவில்லை-திருப்பல்லாண்டு போன்ற கைங்கர்யங்கள் செய்ய தகுதியும் இல்லை; முகம் பார்த்து பழகிய உறவினர்களோ, நண்பர்களோ கூட இல்லை, துன்பமே நிறைந்த இவ்வுலகத்தில் தங்கள் திருவடியையும் நான் பற்றவில்லை-காரொளி வண்ணனே! மேகம் போன்ற காந்தியுடைய கண்ணனே, தென் அரங்கனே வேறு புகலற்று உன்னையே கதறி அழைக்கிறேன்-உன்னை தவிர என்னை காப்பாற்றுபவர் வேறு யார் இருக்கிறார்? ஒருவரும் இல்லையே?

மனதில் ஓர் தூய்மை இல்லை, வாயில் ஓர் இன்சொல் இல்லை
  சினத்தினால்செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்; வாளா
புனத்துழாய் மாலை யானே! பொன்னிசூழ் திருவரங்கா!
  எனக்கு இனிக் கதியென் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே!
                                                                                         திருமாலை

என் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வரவில்லை. என் மனத்திலிருந்து காமம். கோபம், மதம், மாச்சர்யம் போன்ற தீய குணங்கள் நிறந்து இருக்கிறது-அதனால் தூய்மை இல்லை. இப்பேற்ப்பட்ட தீய குணங்கள் நிறைந்த எனக்கு-காவரி மாலையாக சூழப்பெற்ற, அழகிய திருதுளாய் மாலையை அணிந்து திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள   அரங்கனே-எனக்கு நீதான் கதி !

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்;
  களையிருள் அகன்றது காலையம் பொழுதாய்;
மதுவிருந்து ஒழுகின மாமலர் எல்லாம்
  வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த
  இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
  அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே.

                                             
கொஸல்யா சுப்ரஜா ராமா! என்று விச்வாமித்திரர் ராமனை காட்டில் துயில் எழுப்புவதை போல்
ஆழ்வார் அரங்கணை துயில் எழுப்புகிறார்.
கதிரவன் கிழக்கே எழுந்துவிட்டான். இருளும் விலகிவிட்டன. அழகிய காலை பொழுது ஆரம்பாகிவிட்டன. சிறந்த மலர்கள் எல்லாம் விரிந்து தேனை சிந்துகின்றன. தேவர்கள், அசுரர்கள் எல்லோரும் ஒருங்கே கூடி உன்னுடைய வாசற் கட்டிலின் கிழே உன் திருக்கண் படவேண்டும் என்று நிற்கின்றனர். அவர்களோடு வந்த யானை கூட்டங்கள், முரசு வாத்தியம் இவைகளின் ஓசை எங்கும் பரவுகின்றது. எனவே நீ துயிலுணர்ந்து எழுவாயாக

( to be continued )

R.Jagannathan.

Saturday, October 2, 2010

அரங்கனின் பெருமை-அரங்கத்தின் பெருமை-2

அரங்கனின் பெருமை-அரங்கத்தின் பெருமை-2



மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறயாகி, என்னுடைய பெய்வளைமேல்
இச்சை உடையரேல், இத்தெருவே போதாரே?
                                                நாச்சியார் திருமொழி-4


பச்சை பசுந்தேவர்-இந்த மாய கண்ணன் தான் முன்பு மகாபலியின் யாகசாலைக்கு நடந்து சென்று பிச்சையேற்று மூவடி நிலத்தை அளந்து கொண்டார். ஒரு வேளை அப்பிச்சையில் குறை இருக்குமோ? அதனால் தான் என் வளைமேல் இச்சை கொண்டாரோ?

அப்படி இருந்தால் அவர் யாக சாலைக்கு நடந்ததுபோல் இத்தெருவில்    என் வீட்டு வாசலில் நடந்து காட்டி என்னை மகிழ்விக்கலாமே! அசுரனுக்கு காட்டிய கருணையை எனக்கு காட்டலாகாதோ! அப்படி செய்தால் அரங்கனின் அழகை நான் கண்டு ஆனந்திருப்பேனே!

இருள் இரியச் இமைக்கும் நெற்றி
  இனத்துத்தி அணிபணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும்
  அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவித்
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
  திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக்கோமளத்தைக் கண்டு கொண்டு என்
  கண்ணிணைகள் என்றுகொலோகளிக்கும் நாளே?
                                            குலசேகராழ்வார்-பெருமாள் திருமொழி //


திருவரங்கத்தில் ஆதிசேடன் மீது யோக நித்திரை செய்யும் என் திருமால்-அழகிய வெண்மையான படுக்கையாக  அமைந்த  அவ்வனந்தன்- இருள் சிதறி ஓடும்படி ஒளிவிடுகின்ற மாணிக்கங்கள் விளங்கும் நெற்றியுடையவன்-சிறந்த புள்ளிகளுடன் ஆயிரம் படங்களை கொண்டவன். பாம்புகளுக்கெல்லாம் அரசன். அந்த ஆதிசேஷன் படுக்கையாக--காவிரியானவள் தன் திருக்கையால் அடிவருட கண்வளர்தருளுகிறான் திருவரங்கன். அந்த பெரிய பெருமாளை, கரிய மாணிக்கத்தை, கோமளத்தை கண்ணார கண்டு எனது இரு கண்களும் மகிழ்ச்சி கொள்ளும் நாள் எந்த நாளோ?

குலசேகராழ்வார் பல காலம் அரங்கனை காண ஏங்கி கொண்டிருந்தார். அவரின் அரச கடமைகளாலேயோ அல்லது வேறு ஏதோ காரணத்தால் அவரால் திருவரங்க பயணத்தை தொடங்க முடியவில்லை. அந்த விரக தாபத்தால் வெளிவந்த திருமொழிகள் அரங்கனின் அழகுக்கு அழகு சேர்க்கின்றது.

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளு இவ்
  வையம் தன்னொடும் கூடுவது இல்லையான்
ஐயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்
  மையல்கொண் டொழிந்தேன் எந்தன் மாலுக்கே.
                              பெரிய திருமொழி


நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையை நிலையானது என்று கருதுகிற இவ்வுலகத்தாரோடு நான் சேருவதில்லை. ஐயனே! அரங்கனே! என்று கூவுகிறேன், பிதற்றுகிறேன். அரங்கன் மீது தீரா பக்திகொண்டு பித்தனானேன்

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமல செங்கண்
  அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர-லோகம் ஆளும்
  அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே!
                                            தொண்டரடி பொடி ஆழ்வார்- திருமாலை


பச்சை நிறமுள்ள பெரிய திருமலை போன்ற திருமேனியையும், பவளம் போன்ற வாயையும், தாமரை போன்ற திருகண்கள் உடையவனாய்-அச்சுதா! அடியவரை ஒருநாளும் கைவிடாதவனே! ஆயர்குலத்தின் கொழுந்தே என்று உன் திருநாமங்களை அனுபவிக்கும் சுவையை காட்டிலும் பரமபதத்தை ஆளுவதினால் கிட்டும் இன்பம் பெற்றாலும் அந்த சுவை எனக்கு வேண்டாம்-அரங்கன் இருக்கும் இடமே எனக்கு வைகுண்டம்.