Saturday, December 25, 2010

திருவேங்கடமும், வேங்கநாதனும்-7

திருவேங்கடமும், வேங்கநாதனும்-7

1. அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகர் இல் புகழாய்! உலகம் மூன்று
உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகழ் ஒன்று இல்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே !

சதா திருமகள் நித்யவாசம் செய்யும் திருமார்பை உடையவனே! மூவுலகங்ககளையும் படைத்து காக்கும் பரந்தாமனே! என்னை ஆள்கின்றவனே! நித்ய சூரிகளும், முனிவர்களும் விரும்பும் திருவேங்கடத்தில் வாசம் செய்கின்றவனே! உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை, நான் உனக்கே தொண்டு செய்பவன் உன் திருவடியில் சரணம் புகுந்தேன். நீ எனக்கு அடைக்கலம் தந்து என்னை காக்க வேண்டும்.
நம்மாழ்வார்- திருவாழ்மொழி.

1. ஜகத் ஜந்ம ஸ்த்தேம ப்ரளய ரசநா கேளி ரஸிக:
விமுக்த்யேக த்வாரம் விகடித கவாடம் ப்ரணயிநாம் /
இதி த்வய்யாயத்தம் த்விதய முபதி க்ரித்ய கருணே
விசுத்தாநாம் வாசாம் வ்ருஷ சிகரி நாத: ஸ்துதி பதம் //

தயாதேவியே! திருவேங்கடநாதன் உலகில் பல லீலைகளை புரிகிறான் அதில் ஒன்று பிறப்பு, இறப்பு மற்றும் வைகுண்ட வாசலை எப்போதும் உன் பக்தர்களுக்காக திறந்து வைத்திருக்கும் உன் நாதன்-இவை எல்லாவற்றையும் உன் காரணமாகவே கொண்டு செய்கின்றான். அதனால் பரிசுத்தமான வேத வாக்குகளுக்கு துதிக்க ஏற்றவனாய் இருக்கின்றான்.

ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

2. கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார், சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்டபிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே//

மணம் செய்து கொண்ட பெண்டிர்களும், மக்களும் மற்றும் உறவினர்கள், தாயாதியர், நண்பர்கள் ஆகிய அனைவரும் அன்புள்ளவர்களாய் காணப்படுவர் கையில் பொருள் இருந்தால். அது இல்லாத போது அன்பு போய்விடும். ஆனால் திருவேங்கடத்தானோ-ப்ரளய காலத்தில் உலகை உண்டு காப்பாற்றியவன்-அவனுக்கு அடியராகி உய்வு பெறுவோம் அவனையன்றி நமக்கு துணை வேறு யாரும் இல்லை.
நம்மாழ்வார்- திருவாய்மொழி.

2. தாழ் சடையும் நீள் முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன்நாணும் தோன்றுமால்-சூழும்
திரண்டு அருவிபாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து //

ஒரு பக்கம் தாழ்ந்த சடை, மறுபுரம் நீண்ட திருவடி, ஒரு பக்கம் அழகிய மரு, மறுபக்கம் சக்கரப்படை. சுற்றிய நாகம் ஒருபுறம், பொன் அறைநாண் மறு புரம், இப்படி ஒன்றுக்கொன்று சேராத சர்த்தியாக இருக்கிற இரண்டு வடிவம்-நாற்புரமும் அருவிகள் சூழ்ந்த திருமலையில் ஒரே வடிவமாக காண்பது என்ன அதிசயம்.

மூன்றாம் திருவந்தாதி.

3. குலந்தான் எத்தனையும் பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்
நலந்தான் ஒன்றுமிலேன்; நல்லதோரறஞ்செய்துமிலேன்
நிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார் திரு வேங்கடவா!
அலந்தேன் வந்தடைந்தேன்; அடியேனையாட் கொண்டருளே//

திருமங்கை ஆழ்வார் பகவானை பார்த்து கதறுகிறார். பல பிறவிகள் எடுத்துவிட்டேன் ஆனால் யாருக்கும் நலம் ஒன்றும் செய்யவில்லை, நல்ல அறமும் செய்யவில்லை. பிறந்து, பிறந்து ஒழிந்தேன். அலைந்தேன் அலைந்து - கோலைகள் அருவிகள் சூந்த திருவேங்கட மலையில் வாழும் திருவேங்கட நாதா!உன் அடிக்கீழ் புகுந்துவிட்டேன். என்னை ஆட்கொள்.

திருமங்கை ஆழ்வார்- பெரிய திருமொழி.

3. ம்ருது ஹ்ருதயே தயே ம்ருதித காம ஹிதே மஹிதே
த்ருத விபுதே புதேஷு விததாத்மா துர மதுரே /
வ்ருஷகிரி ஸார்வபௌம தயிதே மயி தே மஹதீம்
பவுக நிதே நிதேஹி பவமூல ஹராம் லஹரீம் //


மென்மையான உள்ளம் கொண்ட தயாதேவியே! எங்களை காப்பவளே! ஆசையை வென்றவர்களுக்கு எப்போதும் நன்மை செய்பவளே! உன் அடியார்களிடம் தன் பொறுப்பை கொடுத்தவளாய், திருவேங்கடவன் மார்பில் எப்போதும் உறைபவளாய் அவனை அண்டியவர்களுக்கு உன் மங்களை அளிப்பவளாய், இனியவளாக எல்லோரும் போற்றுபவளான தயா தேவியே! ஸம்ஸார கடலிலிருந்து என்னை மீட்க உன் அலையை என்மீது வீசுவாயாக.

ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்.

சேதநர்கள்:

திருவேங்கடநாதன் சதா தன் பக்தர்கள் தன்னிடம் வர மாட்டார்களா என்று ஆவலோடு திருமலையில் காத்துக்கொண்டிருக்கின்றான். பக்தர்களோ என்று அவனை காண்போம், தங்களுடைய கவலைகளை எல்லாம் அவன் கண்டிப்பாக தீர்த்துவைப்பான் என்ற திட விச்வாஸத்தோடு அவனை சரண் அடைகிறார்கள். பக்தர்களுக்கும் அவனுக்கும் எத்துணை அந்யோந்யம், ஒற்றுமை.

R.Jagannathan.

Thursday, December 9, 2010

திருவேங்கடமும், திருவேங்கடநாதனும்- 6


திருவேங்கடமும், திருவேங்கடநாதனும்- 6

1. சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ
     என் நாவில் இங்கவி யான் ஒருவருக்கும் கொடிக்கிலேன்
     தென்னா தேனா என்று வண்டுமுரல் திருவேங்கடத்து
    அன் ஆனை, என் அப்பன்,எம்பெருமான் உளனாகவே //

பலன்களையே நாடும் உங்களுக்கு நான் இந்த நலத்தை சொன்னால் விரோதமாக இருக்கும். ஆனாலும் உங்கள் கேட்டினை பொறுக்கமாட்டாமல் சொல்லியே தீறுவேன். கேளுங்கள். தேனை குடித்த வண்டுகள் மகிழ்ச்சியால் தென்னா, தேனா என்று ஒலிக்கும் திருமலையில் இருப்பவன் என் திருவேங்கட நாதன். அவன் யானை போன்றவன். தந்தையை போல இதம் செய்பவன். அவனே என் கவிதைக்கு பொருளாய் இருந்து என் நாவிலிருந்து வரும் கவிதைகளை அவனுக்கின்றி வேறு எவருக்கும் கொடுக்கமாட்டே. அதற்கு எனக்கு சக்தியும் கிடையாது.

                                                                           நம்மாழ்வார்- திருவாய் மொழி.

1. அபாம் பத்யு: சத்ரு நஸஹந முநேர் தர்ம நிகளம்
    க்ருபே காகஸ்யைகம் ஹிதமிதி ஹிநஸ்தி ஸ்ம நயநம்
    விளிந ஸ்வாதந்த்ரியோ வ்ருஷகிரி பதிஸ் த்வத் விஹ்ருதிபி:
   திசத்யேவம் தேவோ ஜநித ஸுகதிம் தண்டந கதிம் //

தயாதேவியே! உன் கருணையினால் திருவேங்கடநாதன் சேதநர்களுக்கு கொடுக்கும் தண்டனைகளை நன்மையிலேயே முடித்துவிடுகிறாய்! ஸமுத்ர ராஜன்-ராமன் அழைத்தபோது வராத்தால் பகவான் தண்டிக்க முற்ப்பட்டபோது அது அவனின் பகைவனை கொல்ல முடிந்தது. காகம் தன் ஒரு கண்ணோடு  தப்பித்தான். அதுபோல பரசுராமன் புண்ணியங்களை விலக்கி ஸ்வர்க்கம் போக உதவியது.

2. பூசும் சாந்துஎன் நெஞ்சமே;
     புனையும் கண்ணி எனதுடைய
   வாசகம் கெய் மாலையே:
     வன்பட்டு அஃதே;
   தேசம் ஆன அணிகலனும்
     எங்கைகூப்புச் செய்கையே
   ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த
    எந்தை ஏகமூர்த்திக்கே //

எம்பெருமானுக்கு இணையே கிடையாது. அதனால் அவன் ஏகமூர்த்தி என்று அழைக்கிறோம். அவனே சர்வேச்வரன், அவனே பிரளய காலத்தில் உலகை உண்டு பிறகு உமிழ்ந்து நிலை நிறுத்தியவன். என் தந்தையான அவனுக்கு பூசுகிற சந்தனம் எனது நெஞ்சம். சூட்டுகின்ற மாலைகள் என் பாமாலைகள். உயர்ந்த பொன்னாடையும் அவன் பாமலைகளின் சொற்களே. அணியப்படுகின்ற ஆபரணங்கள் அடியேன் அவன் பால் கை தொழுது நிற்கின்ற என் வணக்கமே.

                                                                        நம்மாழ்வார்- திருவாய்மொழி.

2. ம்ருது ஹ்ருதயே தயே ம்ருதித காம ஹிதே மஹிதே
    த்ருத விபுதே புதேஷு விததாத்மா துரே மதுரே
    வ்ருஷகிரி ஸார்வபௌம தயிதே மயி தே மஹதீம்
    பவுக நிதே நிதேஹி பவமூல ஹராம் லஹரீம் //

மென்மையான உள்ளம் உடையவளே! பக்தர்களை காப்பவளே! ஆசையை வென்றவர்களுக்கு நன்மை செய்பவளே! அறிஞர்களை ஆதரிப்பவளே! திருவேங்கடநாதனுக்கு பிரியமானவளே, மங்களங்களுக்கு உறைவிடமானவளே! தயாதேவியே! ஸம்ஸாரத்தை வேறருக்கும் உன் பெரிய அலையை என்மீது வீசுவாயாக.

3. உலகம் உண்ட பெருவாயா!
    உவப்புஇல் கீர்த்தி அம்மானே!
    நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி
    நெடியாய்! அடியேன் ஆருயிறே!
    திலதம் உலகுக்கு ஆய்நின்ற
    திருவேங்கடத்து எம் பெருமானே!
   குலதொல் அடியேன் உனபாதம்
   கூடும் ஆறு கூறாயே!.

ப்ரளய காலத்தில் உலகமெல்லாம் உண்ட பெருவாயா, அழிவே அற்ற பரம்பொருளே! எப்போதும் சுடர்விட்டு ப்ரகாசிக்கும் ஆரமுதே!அடியனுக்கு அரிய உயிராயிருப்பவனே. உலகத்திற்கெல்லாம் சிகரம் போன்று இருக்கும் திருவேங்கடமலையில் வீற்றிருக்கும் எம்பெருமானே! தொன்று தொட்டே உன் திருவடிக்கே தொண்டு செய்யும் குலத்தை சார்ந்தவனான எனக்கு உன்னுடைய திருவடியை சேரும் வழியை கூறி அருளவேண்டும்.

3. த்வயா த்ருஷ்டஸ் துஷ்டிம் பஜதி பரமேஷ்டி நிஜபதே
    வஹந் மூர்த்தீரஷ்டௌ விஹரதி ம்ருடாநீ பரிப்ருட /
    பிபர்த்தி ஸ்வராஜ்யம் வ்ருஷ சிகரி ச்ருங்காரி கருணே
    சுநாஸீரோ தேவாஸுர ஸமர நாஸீர ஸுபட: //

திருவேங்கட மலையில் உல்லாஸ புருஷனாக விளங்கும் ஸ்ரீனிவாஸனுடைய தயா தேவியே! உன் அநுக்ரஹத்தால் ப்ரம்ம தேவன் ப்ரஜாபதி என்ற ஸ்தானத்தில் இருக்கிறான். பரமசிவனோ எட்டு முகங்களோடு லீலை புரிகிறான். உன் தயவால் இந்திரன்- தேவர்களுக்கு அரசனாய் பரிபாலனம் செய்கின்றான். உன் தயையை என்ன வென்று சொல்ல.
                                                                             ஸ்வாமி தேசிகன்- த்யா சதகம்.

சேதநர்கள்:

அடியவர்களான சேதநர்கள் திருவேங்கடநாதனின் கருணையால் பல இன்னல்களை கடக்கின்றார்கள். அதன் நன்றி மறவாமல் வருஷந்தோறும் உன் தரிசனத்திற்காக கீழிருந்து உன் வாசல் வரை நடந்தே வந்து உன்னை கண்டு ஆநந்த வெள்ளத்தில் மூழ்கி களைப்பையெல்லாம் ஒரு நொடியில் மறந்து புத்துணர்ச்சி பெறுகிறார்கள். என்னே உன் கருணை.

வேங்கடமும், வேங்கடநாதனும்- 5

வேங்கடமும், வேங்கடநாதனும்- 5

1. பற்பநாபன் உயர்வுஅற உயரும் பெரும் திறலோன்
எற்பான்; என்னை ஆக்கிக் கொண்டு, எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம்; கார்முகில் போலும் வேங்கட நல்
வெற்பன்; விசும்போர் பிரான்; எந்தை தாமோதரனே !

எல்லா உலகங்களுக்கும் காரணமான உந்தி கமலத்தை உடையவன். மிக்க உயர்ந்த திறலை உடையவன். என்னிடத்தைலேயே மனதை வைத்திருப்பவன். என்னையல்லாது வேறு எதையும் அறியாதவன். என்னை தமக்கு அடிமையாக்கி கொண்டு எனக்கே தன்னை கொடுத்த கற்பகம், எனக்கு அமுதமானவன் கொடுத்ததை நினைக்காமல் மேலும் மேலும் கொடுக்கும் திருவேங்கடவன், நித்ய சூரிகளுக்கு தலைவன், எளிமையானவன், என்னை அடிமை கொண்டவன் என் தந்தையாவான்.

நம்மாழ்வார் - திருவாய்மொழி

1. ம்ருது ஹ்ருதயே தயே ம்ருதித காம ஹிதே மஹிதே
த்ருத விபுதே புதேஷு விததாத்ம துரே மதுரே /
வ்ருஷகிரி ஸார்வபௌம தயிதே மயி தே மஹதீம்
பவுக நிதே நிதேஹி பவமூல ஹராம் ல
ஹரீம் //

மென்மையான தயா தேவியே! தேவர்களை காப்பவளே! ஆசையை ஒழித்தவர்க்கு சதா நன்மை புரிபவளே! அறிஞர்களை ஆதரிப்பவளே! திருவேங்கட நாதனுக்கு பிரியமானவளே!எல்லா மங்களத்தையும் அருள்பவளே! சம்சாகர அலையில் தத்தளிக்கும் என்னை கடைத்தேறுவாயாக.

2. ஒழிவுஇல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமைசெய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள்சோதி எந்தை தந்தை தந்தைக்கே!

மிக்க அருவிகளுடையது திருவேங்கடம். அங்கே எழுந்தருளியிருக்கிறான் எங்கள் குல நாதன் வேங்கடேசன்.அவன் என் தந்தைக்கும், தந்தைக்கும் தந்தை. அவனுக்கு எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் உடனிருந்து ஒன்றும் குறையாமல் எல்லா அடிமகளையும் நாம் செய்யவேண்டும் .

2. விவித்ஸா வேதாளி விகம பரிசுத்Sபி ஹ்ருதயே
படு ப்ரத்யாஹார ப்ரப்ருதி புடபாக ப்ரசகிதா /
நமந்தஸ் த்வாம் நாராயண ச்கிகரி கூடஸ்த்த கருணே
ந்ருத்த த்வத் த்ரோஹா: ந்ருபதிஸுத நிதிம் ந ஜஹதி //

திருவேங்கடமலையின் உச்சியில் உள்ள ஸ்ரீநிவாசனுடைய தயா தேவியே! உள்ளம் ஆசையாகிற பெண் பேய் ஒழிந்தால் தூய்மை பெற்றுவிடும். இதை பல பெரியவர்கள் செய்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் பக்தியோகம் செய்ய கடுமையாக போராடுகிறார்கள். இதற்கு அஞ்சி சில பெரியோர்கள் எளிய உபாயமான உன்னிடம் ப்ரபத்தி செய்துவிடுகிறார்கள். அவர்கள் சிறு தவறு செய்தபோதிலும் நீ அவர்களை மன்னித்து ஸ்ரீநிவாசனிடம் சேர்த்துவிடுகிறாய். என்னே உன் தயை.

3. குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்றுஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஒழியுமே//

கோவர்த்தன மலையை தூக்கி குளிர்ந்த மழையினின்றும் பசுக்களை காத்தான். இப்படி ஊருக்கு உதவியன், நாட்டுக்கு உதவிய செயல் உலகமே காட்டும். மாவலியிடமிருந்து உலகத்தை மீட்டு அளித்த பேருபகாரன். அவன் விரும்பி குடிகொண்டிருக்கும் திருவேங்கட மலையாகும். இந்த மலையை வணங்கினாலேயே நம் பாபங்கள் எல்லாம் போய்விடும், துன்பங்கள் தாமாக நீங்கிவிடும்.

3. தயே துக்தோதந் வத் வ்யதியுத ஸுதா ஸிந்து நயத:
தவதாச்லேஷாத் நித்யம் ஜநித ம்ருத ஸஞ் ஜீவந தசா: /
ஸ்வதந்தே தாந்தேப்ய: ச்ருதி வதந கர்ப்பூர குளிகா
விஷுண்வந்த: சித்தம் வ்ருஷசிகரி விச்வம்பர குணா: //

தயாதேவியே! திருப்பாற்கடல் மிக இனிமையானது. அதுவே அமுதமான ஆறாக இருந்தால் அதற்கு இறப்பவரை பிறப்பிக்கும் ஆற்றல் உண்டு. திருபாற்கடலும், அமுதஆறும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம். அதுபோல திருவேங்கட முடையான் திருமலை உச்சியில் இருந்து மக்களை காக்கின்றான். அவனுடைய மற்றெல்லா குணங்களை காட்டிலும் அவன் தயா குணமே மிக சிறந்தது, பெருமை மிக்கது. இந்த குணங்கள் இந்திரியங்களை வென்றவருக்கு எப்பொழுதும் இனிப்பாக இருக்கின்றன.

சேதநர்கள்:

கலியுகத்தில் ப்ரத்யக்ஷ தெய்வம் ஸ்ரீநிவாசன். அவன் பரம தயாளு. துயரால் வாடுபவருக்கு அதை போக்கிடுவான். அவனை சரண் அடைந்தவர்கள் ஒரு நாளும் துக்கத்தை அநுபவிக்கமாட்டார்கள். இதை பலரது வாழ்க்கையில் காணலாம். அவனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததுமே நமது மன சுமை இறங்கிவிடும். புது பலம் பெற்று திரும்புவோம்.

R.Jagannathan.

Wednesday, December 1, 2010

வேங்கடமும், வேங்கடநாதனும்-4


வேங்கடமும், வேங்கடநாதனும்-4

1. பெருகு மதவேழம் மாப்பிடிக்குமுன் நின்று
     இரு கண் இளமூங்கில் வாங்கி- அருகு இருந்த
    தேங்கலந்து, நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
    வாங்கலந்த வண்ணன் வரை.

    திருவேங்கட மலையில் ஆற்றுப் பெருக்குப் போல மத நீரையுடைய ஆண் யானை-தனது பெண்யானையின் முன்னே நின்று-இள மூங்கிலை பறித்து அதனை தேனில் தோய்த்து பெண் யானைக்கு நீட்டும். இப்படி ஆண் யானை பெண் யானைக்கு திருவேங்கடமலையில் வாழ்பவன்-பிராட்டியோடு உறைபவன்-வேங்கடநாதன்- அவன் நிச்சியமாக நம்மையும் காப்பான்.

                                         பூதத்தாழ்வார்.     இரண்டாம் திருவந்தாதி

1.ஸாரம் லப்த்வா கமபி மஹத: ஸ்ரீநிவாஸாம்புராசே
   காலே காலே கநரஸவதீ காளிகேவாநுகம்பே
   வ்யக்தோந்மேஷா ம்ருகபதி கிரௌ விச்வ மாப்யாயயந்தீ
   சீலோபஜ்ஞம் க்ஷரதி பவதீ சீதளம் ஸத்குணேளகம் //

தயா தேவியே! ஸ்ரீநிவாசன் என்ற கடலிலிருந்து சாரமான அம்சத்தை எடுத்து நிறந்த அன்பென்னும் நீராய், சிங்கங்கள் வாழும் திருவேங்கடமலையில் நின்று மேக கூட்ட வரிசைபோல உலகத்தை நீ குளிர செய்கிறாய். அந்த அந்த காலத்தில் குளிர்ந்த வெள்ளத்தை ( கருணையை ) பெருக்கி உன் அடியார்களை காக்கின்றாய்-என்னே உன் தயை!

                                                                                  ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

2. பேசுவார் எவ்வளவு பேசுவர், அவ்வளவே;
    வாசமலர்த்துழாய் மாலையான்-தேசுடைய
    சக்கிரத்தான்; சங்கினான்; சார்ங்கத்தான்; பொங்கரவ
    வக்கரனை கொன்றான் வடிவு.

பேசிகிறவர்களுடைய பேச்சுக்கு வரம்பு உண்டு. ஆனால் திருவேங்கடத்தானுடைய குணங்களுக்கு அளவே கிடையாது. மனம் மிகுந்த திருத்துழாய் மாலையை அணிந்தவன்- ஒளிவீசும் சங்கு, சக்கிரம் ஏந்தியவன்- சார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவன்- அசுரர்களை வதைத்தவன்- இப்பேற்ப்பட்ட என் பெருமானின் குணங்களை வர்ணிக்க முடியாது.

                                                          மூன்றாம் திருவந்தாதி

2. ஜகத் ஜந்ம ஸ்த்தேம ப்ரளய  ரசநா கேளி ரஸிக:
    விமுத்யேக த்வாரம் விகடித கவாடம் ப்ரணயிநாம்
    இதி த்வய்யாயத்தம் த்விதய முபதீ க்ருத்ய கருணே
    விசுத்தாநாம் வாசாம் வ்ருஷ சிகரி நாத: /ஸ்துதி பதம் //

தயையே! உலகத்தின் பிறப்பு, இறப்பு, அழிவு-எல்லாவற்றையும் தன் லீலகளாக செய்பவன், தன் மீது பக்தியுடையவர்களுக்கு மொக்ஷத்திற்கு ஒரே வாயிலாக நிற்பவன்-ஆகிய இந்த இரண்டிற்கும் காரணமாயிருப்பவளான உன்னை பரிசுத்தமான திருவேங்கடத்தான் நீயா இதன் காரணமாக-வேதவாக்குகள் உன் நாயகனை புகழ்வது-உன்னையே சாரும்.

                                                                                   ஸ்வாமி தேசிகன்-தயா சதகம்.

3.உயற்வு அற உயர்நலம் உடையவன் எவன்? அவன்
   மயர்வுஅற மதிநிலம் அருளினன் யவன்? அவன்
   அயர்வு அறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன்
   துயர் அறு சுடர்- அடி தொழுது என் மனனே.

வேங்கடநாதனை சரணாகதி அடைவதுதான் -சாச்வதமான மறு பிறவியில்லாத பரம பதத்தை அடைய ஒரே மார்க்கம் என்கிறார்-நம்மாழ்வார்
 என் மனமே! தேவர்கள், மற்றோறுடைய மேன்மையான குணங்கள் முழுவதும் இல்லை என்று சொல்லலாம் படி- மேன் மேலும் உயர்ந்து கொண்டே போகும் நற்குணங்கள் உடையவன் எவனோ-அவன் என்னிடத்தில் உள்ள அறிவின்மை யாவும் நிங்க-பக்தியின் நிலையை அடைந்த அறிவை தந்தான். அந்த அறிவை தந்தவன் எவனோ-அவன் மறதி என்பது இல்லாத நித்ய சூரிகளுக்கு தலைவன். அந்த நித்ய சூரிகளுக்கு தலைவன் எவனோ அவனுடைய திருவடிகள் எல்லா துயர்களையும் நீக்குகின்றன-அந்த ஒளிபொருந்திய திருவடிகளை சரண் புகுந்து பிறவி பெருங்கடலிலிருந்து கரை ஏறுவாய் மனமே!
                                                                                              நம்மாழ்வார்-திருவாய்மொழி.

3. அநுபவிது மகௌகம் நால மாகாமிகால:
    ப்ரசமயிது மசேஷம் நிஷ்க்ரியாபிர் சக்யம்
    ஸவயமிதி ஹி தயே த்வம் ஸ்வீக்ருத ஸ்ரீனிவாஸா
    சிதிலித பவபீதி: ச்ரேயஸே  ஜாயஸே : //

தயாதேவியே! என்னுடைய பாபக்கூட்டங்களை முழுவதுமாக அநுபவிப்பதற்கு வருங்காலம் போதாது. ப்ராயசித்தங்களாலும் ஒழிக்கமுடியாதுஇதை கருதிதானே நீ ஸ்ரீனிவாஸனை
வஸப்படுத்திக்கொண்டு எங்களுடைய ஸம்ஸார பயத்தை நீக்கி எங்களை திருவேங்கடமுடையானின் திருவடிகளில் சேர்க்கின்றாயே! உன் கருணையே என்னவென்று சொல்ல.

                                                                              ஸ்வாமி தேசிகன்- தயா சதகம்

சேதநர்கள்:
யாராயிருந்தாலும்- அது பணக்காரனோ ஏழையோ, படித்தவனோ, படிக்காதவனோ-எல்லோருக்கும் பயம் என்பது உடலோடு ஒட்டிக்கொண்டே இருக்கும். இதை போக்க ஒரே மருந்து-ஸ்ரீநிவாஸனுடைய திருவடிகளே. அதை இருக்கமாக பற்றிவிட்டால் இந்த பயம் நம்மிடமிருந்து நீங்கிவிடும்- தர்மத்தின்பால் கொண்டு  சேர்க்கும்- முடிவில் முக்தி தரும்.

R.Jagannathan.