Sunday, October 31, 2010

அரங்கமும், அரங்கனும்-9

அரங்கமும், அரங்கனும்-9

பரியனாகிவந்த அவணனுடல் கீண்ட* அமரரர்க்கு
அரிய ஆதிபிரான்-அரங்கத்தமலன்முகத்து
கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்துசெவ்வரியோடி* நீண்ட அப்
பெரியவாயகண்கள் என்னைப்பேதமைசெய்தனவே
.



மிகப்பெரிய சரீரத்துடன் வந்த இரணியாஸுரனின் சரீரத்தை பிளந்தவனாய்; பிரமன் முதலிய தேவர்களுக்கு அணுகவும், அநுபவிக்கவும் அரியனாய்; எல்லாவற்றிர்க்கும் காரணா காரியமாய் உபகாரனாய்; திருவரங்கத்தில் பள்ளிகொண்டு சகல கஷ்டங்களையும் போக்குபவனாய்; அப்பேற்ப்பட்ட பெரிய பெருமாள் திருமுகத்தில் கருநிறமுடையவாய்; விசாலமாய் மலர்ந்தனவாய்; சிவந்தவரிகளை உடையனவனாய், நீண்டனவாய், அகன்றனவாய் உள்ள திருகண்கள் அவரை விட்டு வேறு எதிலும் நாடாது ஆகர்ஷிக்கின்றன.

                                                                                திருப்பாணாழ்வார்-அமலநாதிபிரான்

8. ஸாபிப்ராய ஸ்மித விகஸிதம் சாரு பிம்பாதரோஷ்டம்
துர்க்காபாய ப்ரணயிதி ஜநே தூர தத்தாபிமுக்யம்
காந்தம் வக்த்ரம் கநக திலகாலங்க்ருதம் ரங்கபர்த்து:
ஸ்வாந்தே காடம் மம விலகதி ஸ்வாகதோதார நேத்ரம் //

கருத்து அடங்கிய புன்சிரிப்பால் மலர்ந்ததாய், அழகிய கோவைகனிபோன்ற கீழ்மேல் உதடுகளையுடையதாய், துன்பம் நீங்குவதை விரும்புகின்ற மக்களிடத்தில் தூரத்திலிருந்தே அவர்களை கடாக்ஷிப்பதாய், அழகிழ பொன்னால் ஆன திலகர்த்தால் அழகு செய்யப்பெற்றதாய்-எப்போதும் நல்வரவே கூறும் திருக்கண்களுடைய திருவரங்கனது திருமுகம் என் உள்ளத்தில் ஆழமாக, உறுதியாக பதிந்துவிட்டது.

                                                            ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்.

சேதனன்:

கருவரையில் பெருமாளை சேவித்துவிட்டு திருமாமணி மண்டபத்து வாசலுக்கு வந்து- மறுபடியும் கருவரையை நோக்கினால் பெரிய பெருமாளின் திருமுகமும் அவன் நீண்ட அகல கண்கள் மட்டும் காட்சி தரும். அந்த கண்கள் என்ன சொல்கின்றன? பக்தா நீ உள்ளே வரும்போது உன் கண்களை பார்த்தேன்-அவை கலங்கி இருந்தன. நீ ஏதோ சொல்ல விரும்பினாய்-ஆனால் என்னை பார்த்ததும் ஒன்றும் சொல்லவில்லையே! கவலைபடாமல் போ! எல்லாம் நன்மையாகவே முடியும் என்று ஆறுதல் சொல்கின்றன அந்த பெரியவாய் கண்கள்.

9. ஆலமாமரத்தினிலைமேல் ஒருபாலகனாய்*
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவினணையான்*
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்
நீலமேனி ஐயோ! நிறைகொண்டது என்நெஞ்சினையே //

ஒரு பெரிய ஆலமரத்தின் இலையில் ஒரு குழந்தையாக; உலகம் ஏழும் வயிற்றில் வைத்ததாய், திருவரங்கத்தில் ஆதிசேஷனின் மேல் பல்ளிகொண்டிருக்கும் பெரிய பெருமாளுடைய அழகியதாய் பெரிய ரதனமாலையும், அளவற்ற, ஒப்பற்ற அழகையுடைய நீல திருமேனி என் உள்ளத்தின் அடக்கத்தைக் கொள்ளை கொண்டது ஐயோ! என் செய்கேன்.

                                                                               திருப்பாணாழ்வார்- அமலநாதிபிரான்

9. மால்யை ரத்ந: ஸ்த்திர: பரிமளைர்வல்லபா ஸ்பர்சமாந்யை:
குப்யச் சோளி வசந குடிலை: குந்தளை: ச்லிஷ்டமூலே:
ரத்நாபீட த்யுதி சபளிதே ரங்கபர்த்து: கிரீடே
ராஜந்வத்ய: ஸ்த்திதி மதிகதா வ்ருத்தயச் சேதஸோ மே //

உள்ளே மலர்மாலைகளால் நிலைபெற்ற மணமுடையதாய், பிராட்டிமார்கள் கை பட்டதனால், மதிப்புக்குரியனவாய் கோபங்கொண்ட சோழ நாட்டு பெண்களின் பேச்சுக்கள் போல், வக்கிரமானவையாய் உள்ள திருக்குழல்களோடு அடிப்பகுதியின் சம்பந்தம் பெற்றதாய், இரத்தினங்களாலான முடிமாலைகளின் ஒளியால் பலம் நிறம் பெற்றதான திருவரங்க நகரப்பனது கிறிடத்தில் என் உள்ளத்தின் போக்குகள் நல்ல அரசனை பெற்றதாக நிலையான இருப்பை பெற்றுள்ளன.

                                                              ஸ்வாமி தேசிகன்- பகவத் த்யான சோபானம்

சேதனர்கள்:

நான் ஸ்ரீரங்கம் ஸ்டேட் பாங்கிற்கு போனேன். அங்கே அழகாக பெரிய பெருமாளை பார்த்தேன். முற்றிலும் பேப்பர் மெஷ்ஷினால் செய்யப்பட்டது. முழுவதும் கருமை நிறம். யார் செய்தார்கள் என்று விசாரித்து அவரிடம் 6-பெருமாளை வாங்கிகொண்டேன்.

வெகு அழகான பெருமாள். எனக்கு ஒரு ஆசை. பெரிய பெருமாள் கோவிலில் எப்படி இருக்கிறாரோ அப்படியை என் பெருமாளையும் அழகு செய்யவேண்டும். அரங்கனை வேண்டிக்கொண்டு அதற்கான பொருட்களை சேகரித்தேன். தங்க பெயிண்ட், பல வர்ணங்கள் போன்றவற்றை சேகரித்தேன். முதலில் திருவடியை தங்கமயமாக்கினேன். பிறகு பட்டு பீதாம்பரம், வனமாலை. கடைசியாக மகரகுண்டலம், தங்க கிரீடம். எல்லாம் முடிந்து அழகு பார்த்தேன். அதே சமயம் அரங்கனை சேவிக்க சென்றேன். அன்று ஏனோ பெரிய பெருமாள் ஜகத் ஜோதியாய் காட்சியளித்தார். வர்ணிக்கமுடியாத அழகு. மனதில் ஒருநிச்சலமான ஒரு அமைதி. வீட்டிற்கு வந்தேன். என்ன ஆச்சர்யம்! என் பெருமாளும் அப்படியே இருந்தார். என்னை அறியாமலேயே தத்ரூபமாக பெருமாள் அப்படியே என் கிருஹத்தில் வந்து குடியேறி இருக்கிறார்.
என்னே அவன் கருணை, ஸௌலப்யம்.

10. கொண்டல்வண்ணனை கோவலனாய் வெண்ணெ
யுண்டவாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை*
அண்டர்கோன் அனியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள்* மற்றொன்றினைக் காணாவே //

மேகம் போன்ற நிறமுடையவனாய் இடையர் குலத்தில் பிறந்து வெண்ணையை உண்ட திருவாயை உடையவனாய் என் மனத்தை கவர்ந்தவனாய் அண்டத்துக்குள் உள்ள பிரமன் முதலியோருக்கு தலைவனாய் அழகிய திருவரங்கத்தில் அவதரித்தவனாய் எனக்கு அமுதமாக நின்றவனை காணப்பெற்ற கண்கள் வேறொன்றையும் காணமாட்டா.

                                                                               திருப்பாணாழ்வார்-அமலநாதிபிரான்.

10. பாதாம்போஜம் ஸ்ப்ருசதி பஜதே
ரங்கநாதஸ்ய ஜங்காம்
ஊரு த்வந்த்வே விலகதி சநை
ரூர்த்வ மப்யதே நபிம்
வக்ஷஸ்யாஸ்தே வலதி புஜயோர்
மாமிகேயம் மநீஷா
வக்த்ராபிக்யாம் பிபதி வஹநே
வாஸதாம் மௌளி பந்தே //

என்னுடைய புத்தியானது திருவரங்கனின் திருவடியை தொடுகின்றது. கணைக்காலை சேவிக்கின்றது. இரு தொடைகளின் மேல் மெள்ள பதிகின்றது. மேலே திருவந்தியை காண்கிறது.திருமார்பில் பிராட்டியை சேவிக்கின்றது. திருக்கையில் சங்கும், சக்கிரத்தை காண்கிறது. திருமுகத்தின் காந்தியில் லயித்துவிடுகிறது. கிரீடத்தின் அழகில் ஈடுபடுகிறது. என் புத்தி ஒரு பெண். ஒரு பெண் தானே தன் நாயகனின் அழகை பருகமுடியும்.

சேதனன்:
நான் 14-வருஷம் ஸ்ரீரங்கத்தில் தங்கி பெருமாளை அனேகமாக எல்லா நாட்களிலும், முக்கியமாக பண்டிகை நாட்களில் அரங்கனை சேவித்திருக்கிறேன். உனக்கு பரிபூரணமான திருப்தி கிடைத்ததா? என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்வேன். எவ்வளவு நேரம் நின்று சேவித்தாலும் அடுத்த நிமிடம் அரங்கனிடத்தில் எதோ ஒன்றை காண மறந்துவிட்டோமா என்று ஒரு சபலம். பாதாதி கேசம் வரையில் பல தடவை சேவித்திருக்கிறேன் ஆனாலும் அவனை முழுமையாக அனுபவிக்கமுடியவில்லையே என்ற ஏக்கம் என் உள்ளே சதா ஏங்குகிறது. அனேகமாக எல்லோருக்குமே இந்த அனுபவம்.

11. காந்தோதாரை ரயமிஹ புஜை:
கங்கண ஜ்யா கிணாங்கை:
லக்ஷ்மீதாம்ந: ப்ருதள பரிகை:
லக்ஷிதாபீதி ஹேதி:
அக்ரே கிஞ்சித் புஜக சயந:
ஸ்வாத்மநைவாத்மந: ஸந்
மத்யேரங்கம் மம ச ஹ்ருதயே
வர்த்ததே ஸாவரோத:

அழகியவனாய் கொடையிற்சிறந்தவனாய் கைவளையல்கள், கங்கணம் இவைகளின் தழும்புகள் கையில் பதியப்பெற்றவனாய் பெரிய பிராட்டி உறையும் திருமார்புக்கு பாதுகாப்பாக உள்ள திருக்கைகளில் அபயமளிக்கும் திருவாயுதங்களை காட்டிக்கொண்டு இருப்பவனாய், ஆதி சேஷன் மீது பள்ளிகொண்டிருப்பவனாய் இந்த திருவரங்கன் திருமாமணி மண்டபத்தில் பெரிய பெருமாளுக்கு சற்று முன்னே உபய நாச்சிமார்களுடன் பகதர்கள் மனதிலும் என் மனதிலும் உறைகின்றான்.

12. ரங்காஸ்தானே ரஸிக மஹிதே ரஞ்ஜிதாசேஷ சித்தே
வித்வத் ஸேவா விமல மநஸா வேங்கடேசேந க்லுப்தம் /
அக்லேசேந ப்ரணிஹித தியா மாருருக்ஷோ ரவஸ்த்ரம்
பக்திம் காடாம் திசது பகவத் த்யாந சோபாந மேதத் //

பகவத் விஷயத்தில் மனதை செலுத்தியவர்களால் போற்றப்பட்டதாய், எல்லோருடைய உள்ளத்திலும் மிக்க மகிழ்விப்பதாய் உள்ள திருவரங்கம் என்னும் திவ்ய க்ஷேத்திரத்தில் பாமரர்கள், ஞானிகள், ப்ரம்மவித்துக்கள் பணிவிடையால், தூய உல்லம்கொண்ட வேங்கடேசன் என்னும் கவியால் இந்த பகவத் த்யாந சோபானம் என்னும் ஸ்தோத்ரம்-அரங்கனின் மோக்ஷ சாம்ராஜ்யத்தை கஷ்டமின்றி அடைய உறுதியான பக்தியை அளிக்கட்டும்.

                                                             ஸ்வாமி தேசிகன்-பகவத் த்யான சோபாநம்.

சேதனர்கள்:

பகவானை அடைய மிக எளிதான மார்க்கம்-நாம சங்கீர்த்தனமும் அவனை அர்ச்சா மூர்த்தியாக பல பல அலங்காரத்துடன் கண்டருளுவதும் தான். மும்மூர்த்திகளான- அரங்கன்-ஸ்ரீநிவாசன்-வரதன் இவர்கள் எல்லோரும் ஒருவரே. அந்த அந்த க்ஷேத்திரத்தில் அவர் அவர்கள் அழகு காண கண்கொள்ளா காட்சி. எல்லோரும் பக்தர்களுக்கு தங்கள் குணங்களான-ஸோலப்யம், காருண்யம், தயை போன்ற குணங்கலாள் கடாக்ஷித்து நம்முடைய குறைகளை ஒரு விநாடியில் தீர்த்து வைக்கின்றான். நம்மிடம் அவன் எதிர்பார்ப்பது ஒன்றே தான்- திடமான நம்பிக்கை. அதற்கு நானே சாக்ஷி-நொடிந்துபோய் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அவனிடம் ஓடி கதறி அழுதேன்-அடுத்த நாளே எனக்கு விடிவு காலத்தை ஏற்படுத்திகொடுத்த வள்ளல்.

R.Jagannathan.

No comments:

Post a Comment